வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சுமார் 10 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், 4 பேரைக் கைது செய்தனர். இந்த அளவுக்குப் பெரிய தொகையைக் கொண்டு செல்வதற்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லை.
வேலூர் மாவட்டத்தின் வழியாக சென்னை, திருவண்ணாமலை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் கடத்திச் செல்கின்றனர். வழிபறியிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
அவர்களைக் கண்காணிக்க வேலூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் வாகன சோதனைகளிலும் சுற்றுக்காவல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய காவலர்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருள்களை சிலர் ஏற்றுக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர்.
உடனடியாக விரைந்து சென்று அவர்களிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் வைத்திருந்த பெரிய பொட்டலங்களைப் பிரித்து பார்த்தபோது, அதில் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால், கறுப்புப் பொட்டலங் கள் மூலம் லாரியில் ஏற்ற முயன்ற சுமார் 10 கோடி ரூபாய் பணத்தையும் காரையும் பறிமுதல் செய்த காவலர்கள், நான்கு பேரை கைது செய்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
48 பொட்டலங்களில் ரொக்கப்
பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
பிடிபட்ட நபர்கள் சென்னை பிராட்வேயிலிருந்து கேரள மாநிலம் கோழிகோட்டிற்கு அந்தப் பணத்தை கடத்தப்படவிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வேலூர் வருமான வரித் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து கேரளாவிற்குக் கடத்த முயன்ற கும்பல் பிடிபட்டது