ஃபோர்ட் மையர்ஸ் (அமெரிக்கா): அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை 'இயன்' சூறாவளி தாக்கியதில் குறைந்தது 10 பேர் மாண்டுவிட்டனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இம்மாநிலத்தில் சூறாவளி தாக்கிய பிறகு சுமார் 2.2 மில்லியன் வீடுகளில் இன்னமும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மோசமான வெள்ளத்தால் சிலர் தங்களின் வீடுகளில் சிக்கியிருக்க நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
'இயன்' சூறாவளி, ஃபுளோரிடாவின் வரலாற்றில் ஆக மோசமானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
கணிசமான எண்ணிக்கையில் மரணங்கள் பதிவாகக்கூடும் என்றும் அவர் கூறினார்.
ஆகக் கடைசி நிலவரப்படி 'இயன்' சூறாவளி வட, தென் கெரலைனா மாநிலங்களை நோக்கி நகர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஃபுளோரிடாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது 'இயன்' வலுவிழந்து சாதாரணப் புயல் காற்றாக மாறியது. அனால், நேற்று முன்தினம் தென்கெரலைனாவை நோக்கிச் செல்லும்போது அது மீண்டும் வலுவடைந்தது.