ஆ. விஷ்ணு வர்தினி
ஜெர்மன் காற்பந்துப் போட்டிகளில் எட்டு முறை வாகை சூடிய பிரபல பொருசியா டோர்ட்மண்ட் காற்பந்துக் குழு, நட்புமுறை காற்பந்து விளையாட்டில் சிங்கப்பூரின் லயன் சிட்டி செய்லர்ஸ் குழுவைச் சந்திக்க இருக்கிறது. அடுத்த மாதம் 24ஆம் தேதியன்று, ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் ஆட்டம் நடைபெறும்.
கடைசியாக 2015ல் ரசிகர்
களைக் காண சிங்கப்பூருக்கு வந்திருந்தது பொருசியா டோர்ட்மண்ட். அடுத்த மாதம் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சிங்கப்பூரில் பொருசியா டோர்ட்மண்ட் குழு இருக்கும். சிங்கப்பூர் காற்பந்து ரசிகர்களுடன் அணுக்கமான தொடர்பை ஏற்படுத்திக்
கொள்ளவும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடவும் அது திட்ட
மிட்டுள்ளது.
கத்தாரில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் ஜெர்மனிக்காகக் களமிறங்கும் ஆட்டக்காரர்கள் இம்முறை சிங்கப்பூர் வராவிட்டாலும், அணியின் மற்ற பிரபல விளையாட்டாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு.
இம்மாதம் 24ஆம் தேதிவரை 15 விழுக்காடு கழிவுடனான முதற்கட்ட நுழைவுச்சீட்டு விற்பனை நடக்கும். https://www.sistic.com.sg/events/bvb1122 இணையத்தளத்தில் காற்பந்து ரசிகர்கள் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஐரோப்பாவின் சிறந்த காற்பந்து குழுக்களில் ஒன்றான டோர்ட்மண்ட்டுடன் மோதுவது லயன் சிட்டி செய்லர்ஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். டார்ட்மண்ட் குழுவிடமிருந்து கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு லயன் சிட்டி செய்லர்ஸ் குழுவுக்குக் கிடைத்துள்ளது.
"நீண்ட வரலாறு கொண்ட டோர்ட்மண்டிடமிருந்து விளையாட்டு நிர்வாகம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐரோப்பிய விளையாட்டாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து முன்னேறுவதற்கும் எங்களுக்கு இது பெரிதளவில் உதவும்," என்றார் லயன் சிட்டி செய்லர்சின் அணித் தலைவர் ஹாரிஸ் ஹருண். எதிர்வரும் சிங்கப்பூர் கிண்ணம் முதலிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள லயன் சிட்டி செய்லர்ஸ் அணி முனைவதாகவும் அவர் தமிழ் முரசிடம் கூறினார்.
பொருசியா டோர்ட்மண்ட்-லயன் சிட்டி செய்லர்ஸ் பங்காளித்
துவமானது, இளையர்களை விளையாட்டுகளின் பக்கம் ஈர்க்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளதாக கூறினார் பிவிபி தென்கிழக்காசியாவின் தலைமை நிர்வாகி திரு சுரேஷ் லெட்சுமணன்.
"இளமையில் கல்வியிலும் விளையாட்டுகளிலும் ஈடுபட வலியுறுத்தவேண்டும். முன்பெல்லாம் சிங்கப்பூர் காற்பந்துக் குழு வலிமைமிக்கதாக இருந்தபோது அதில் பல இந்தியர்களும் இருந்தனர்.
"தற்போது இந்திய இளையர்
களிடத்தில் தனித்திறமையும் ஆர்வமும் இருந்தும் அவர்களை காற்பந்து விளையாட்டாளர்களாக நம்மால் வளர்த்தெடுக்க முடியவில்லை.
"இதை மாற்றுவதற்கு, காற்பந்தை பிரபலப்படுத்துவது ஒரு தொடக்கமாக இருக்கலாம்," என்றார் திரு சுரேஷ் லெட்சுமணன்.