சிங்கப்பூரில் இந்துக்களின் மிகப் புராதன தீமிதித் திருவிழா கொவிட்-19 தலை காட்டியது முதல் இந்த ஆண்டு ஆகப் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லாமல் வெகுசிறப்பாக நடந்தது.
சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள மிகப் பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஏறத்தாழ 1,000 தொண்டூழியர்கள் உதவியுடன் 9,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சூழ, கிட்டத்தட்ட 3,000 பேர் பூக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்கள் வேண்டுதல்களை நேற்று நிறைவேற்றினர்.
கொவிட்-19 காரணமாக 2020ஆம் ஆண்டில் தீமிதித் திருவிழாவில் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. சென்ற ஆண்டு 950 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ மாரியம்மன் கோயில் வரை 4 கி.மீ. நடையும் ஈராண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு இடம்பெற்றது.
இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. என்றாலும் நேரக் கட்டுப்பாடுகளுடனான முன்பதிவுத் திட்டம் இந்த ஆண்டும் அமல்படுத்தப்பட்டது.
எந்தவொரு நேரத்திலும் கூட்டத்தில் அதிகபட்சம் 500 பேர் மட்டுமே இருப்பதை உறுதிசெய்யும் வகையில், பக்தர்கள் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்தும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இருந்தும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர்.
காலையில் மழை பெய்ததால் தீமிதித் விழா தாமதமாகத் தொடங்கியது. மாரியம்மன் கோயிலின் தலைமை பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, 39, நேற்று மாலை 6 மணியளவில் கரகம் சுமந்து வந்து மாலை 7.18 மணிக்குப் பூக்குழி இறங்கி விழாவைத் தொடங்கி வைத்தார்.
நேற்றுக் காலை தொடங்கிய படுகளத்திற்குப் பின்னர் 18 அடி நீளம், 8 அடி அகலமான பூக்குழி தயாரானது.
இந்த ஆண்டில் இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாட்டில் யூடியூப், ஃபேஸ்புக் வழியாக விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தொடர்பு, தகவல் அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ தீமிதி விழாவில் கலந்துகொண்டார்.
கொரோனாவுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் தீ மிதித்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 40% குறைந்திருக்கிறது என்றாலும் பக்தர்களின் மனதில் பெரும் நிறைவை இந்த ஆண்டு காணமுடிந்தது என்று கூறினார் கோயில் நிர்வாக தலைவர் திரு சீ. லெச்சுமணன்.
நேற்று தீ மிதித்த பக்தர்களில் ஒரு வரான 19 வயது மாணவர் கதிரவன் சந்திரசேகரன், 16 வயதில் தீ மிதிக்கத் தொடங்கினார். இந்த ஆண்டு முழங்காலில் காயம் பட்டிருந்தாலும் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார், இந்த பிஎஸ் பி அகாடமி முதலாம் ஆண்டு விளையாட்டுத் துறை படிப்பு மாணவர்.
அதோடு மட்டுமின்றி, இந்த ஆண்டு முதன் முதலாக தீ மிதித்த தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி மாணவரான 18 வயது கீர்த்திகேசன் கணேசன் என்ப வருக்கும் அந்த மாணவர் உதவினார்.
தீ மிதித்தது பற்றி கருத்துக் கூறிய கீர்த்திகேசன், என் இந்த அனுபவம் என் அச்சம் அனைத்தையும் போக்க உதவி இருக்கிறது என்று கூறினார்.
தகவல் தொழில்நுட்ப அதிகாரியான திரு சிவகுமரன் சாத்தப்பன், 53, இந்த ஆண்டு 28வது முறையாக தீ மிதித்தார்.
தன் தாயார் குணமடைய வேண்டி தனது 21வது வயதில் முதன்முதலாக தீ மிதிக்கத் தொடங்கிய இவருடைய வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து இன்றுவரை தொடர்ந்து தீ மிதித்து வருகிறார்.
வரும் ஆண்டுகளில் தனது 18 வயது மகனும் தீமிதி விழாவில் கலந்துகொண்டு தீ மிதிப்பார் என்று இவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் பணியாற்றும் திரு குமரவேலு பழனிவேலு, 40, தன் தந்தையின் தீமிதிப் பாரம்பரியத்தைத் தான் தொடர்வதாகக் கூறினார்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தீ மிதித்து வந்த தந்தையுடன் தனது இருபதாவது வயதில் தீ மிதிக்க தொடங்கிய திரு குமரவேலு, இந்த ஆண்டு 17வது முறையாகத் தீக்குழி இறங்கினார்.
தந்தையின் மறைவுக்குப் பின்னர் தீமிதி திருவிழா தந்தையையும் தீமிதி நினைவுகளையும் நினைவுகூரும் ஒரு வாய்ப்பாக மாறியுள்ளதாக இவர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையில் பணியாற்றும் 47 வயது திரு ராஜாகாந்த், இவ்வாண்டின் திருவிழா களைகட்டியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து தீ மிதித்து வரும் கட்டுமான ஊழியரான திரு இளங்கோவன் விஸ்வ நாதன் என்பவர், தான் தீ மிதிக்கத் தொடங்கியது முதல் குடும்பத்தின் நிதி நெருக்கடிகள் தீர்ந்து வாழ்வின் நிறைவைக் கண்டிருப்பதாகத் தெரிவித்தார்.