பினாங்கு மாநிலத்தின் அரசாங்கம், வரும் ஜனவரி 18ஆம் தேதி தைப்பூச தேர் ஊர்வலம் நடைபெறுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும் இவ்வாண்டு காவடி ஊர்வலம் நடைபெறாது போகக்கூடும்.
பினாங்கின் துணை முதலமைச்சர் பேராசிரியர் பி ராமசாமி இதைத் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.
மலேசியாவின் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் வழிகாட்டிகளுக்கு ஏற்ப, இரு தேர் ஊர்வலங்களுக்கான நடைமுறைகளை பினாங்கு அரசாங்கம் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று பேராசிரியர் ராமசாமி கூறினார்.
அதே நேரம் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் வழிகாட்டிகளின்படி, காவடி ஊர்வலம் நடத்தப்படாமல் போகலாம் என்று அவர் சொன்னார்.
தேர் ஊர்வலத்தில், தேர் நிற்கும் இடங்கள் குறைக்கப்படும் என்றும் பேராசிரியர் ராமசாமி கூறினார்.
அவர் பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவரும் ஆவார்.
தேர் ஊர்வலத்தில் விதிமுறை அத்துமீறல் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வாரியமும் பினாங்கில் உள்ள கோவில்களும் காவல்துறையுடன் ஒத்துழைக்கும் என்றார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக பினாங்கில் வழக்கமாக நடக்கும் தைப்பூச இரட்டை தேர் ஊர்வலம் நடத்தப்படவில்லை.
இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா ஜனவரி 18 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழாவின்போது காவடிகளுக்கும் பாத ஊர்வலத்துக்கும் அனுமதி இல்லை.