பீஷான் ரோடு-பிராடல் ரோடு சந்திப்பில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது.
பேருந்து, லாரி, கார் ஆகியன தொடர்பான இவ்விபத்து பற்றி நேற்று பிற்பகல் 3.29 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
லாரி, பேருந்து மோதியதில் லாரி எதிர்ப்புறத்துக்கு தள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். பின்னர் அந்த லாரி போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்காக காத்திருந்த காரின் மீது மோதியது.
லாரியில் இருந்த 22 வயது ஆடவரும் பேருந்தில் இருந்த 46 வயது பெண்மணியும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.
லாரி ஓட்டுநரான 23 வயது இந்திய நாட்டவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்கு ஓட்டுநர் உரிமம் பெற்றதாகவும் இருபது நாட்களாக ஓட்டுநர் வேலை செய்வதாகவும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் கூறினார்.
அபாயகரமாக வாகனம் ஓட்டியதாக லாரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
அவரது இடது கையில் சிறிய காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. விசாரணை தொடருகிறது.
#விபத்து #இந்தியஓட்டுநர் #பிராடல் #பீஷான் #தமிழ்முரசு