இது மாற்றத்திற்கான நேரம் என்று ஜாலான் புசார் குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் குரல் கட்சி இன்று தெரிவித்தது. ‘சிங்கப்பூரை மீண்டும் நம் தாயகமாக ஆக்குவோம்’ என்று அது குரல் கொடுத்தது.
அரசியல் கட்சிகள் ஒளிபரப்பில் பேசிய கட்சித் தலைவர் லிம் தியன் தேர்தலில் தன் கட்சியினர் வெற்றி பெற்றால் அவர்கள் சமூகத்திற்குச் செவிசாய்த்து சமூகத்துடன் சேர்ந்து செயல்பட்டு சமூகத்தின் குரலையும் அக்கறைகளையும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பார்கள் என்று தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்றை அரசாங்கம் கையாண்ட விதத்தை திரு லிம் குறைகூறினார். வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 கிருமித்தொற்று அதிகமாகப் பரவியதற்கு ஜாலான் புசார் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜாலான் புசாரில் மசெக அணிக்குத் தலைவராக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ போட்டியிடுகிறார். அவரின் ஆற்றலையும் தலைமைத்துவத்தையும் பரிசோதித்துப் பார்ப்பதற்கான கருத்தெடுப்பாக தங்கள் வாக்குகளை வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் திரு லிம் கேட்டுக்கொண்டார். தன் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் திரு லிம் அறிமுகப்படுத்தி வைத்தார்.