ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனமான விஸ்தாராவையும் இணைக்க சிங்கப்பூர் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர் இந்தியா உரிமையாளரான டாடா குழுமமும் சிங்கப்பூர் ஏர்லைன்சும் கூட்டாக இணைந்து விஸ்தாரா நிறுவனத்தை உருவாக்கின.
முன்னதாக, உள்நாட்டிலும் அனைத்துலகச் சந்தையிலும் முழுமையாகச் சேவை வழங்கும் வகையில், விஸ்தாராவை ஏர் இந்தியாவுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த 2022 நவம்பரில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்தது.
அதன்படி, அந்த இணைப்பு நடவடிக்கைக்கு இந்தியா 2023 செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், அந்த இணைப்புத் தொடர்பில் போட்டித்தன்மை சார்ந்த சில அக்கறைகளைச் சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை ஆணையம் அடையாளம் கண்டது.
சிங்கப்பூருக்கும் புதுடெல்லி, மும்பை, சென்னை, திருச்சிராப்பள்ளி ஆகிய நான்கு இந்திய நகரங்களுக்கும் இடையே இயக்கப்படும் நேரடி விமானச் சேவைகளில் பெரும்பாலானவற்றை அவ்விரு விமான நிறுவனங்களே இயக்கிவரும் நிலையில், போட்டித்தன்மை ஆணையம் தனது அக்கறைகளை முன்வைத்தது.
இதனையடுத்து, அந்தத் தடங்களில் கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்பிருந்த அளவிலேயே விமானங்களை இயக்கவும், அதனைக் கண்காணிக்க தன்னிச்சையான தணிக்கையாளர்களை நியமிக்கவும், வருடாந்தர, இடைக்கால அறிக்கைகளைத் தாக்கல் செய்யவும் அவை முன்மொழிந்துள்ளன.
ஏர் இந்தியா - விஸ்தாரா இணைப்பிற்கு மற்ற ஒழுங்குமுறை ஆணையங்களும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
புதிய உடன்பாட்டின்படி, இணைப்பிற்குப்பின் அந்தக் கூட்டு நிறுவனத்தில் டாடா குழுமத்திற்கு 74.9% பங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்சிற்கு 25.1% பங்கும் இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.