செங்காங்கில் உள்ள காம்பஸ் ஒன் மாலில் அமைந்துள்ள யா குன் காயா டோஸ்ட் கடையில், ‘பாதுகாப்பான இடைவெளி’யில் அமர்வதை உறுதிப்படுத்துவதற்காக “X” குறியிடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வாடிக்கையாளரிடம் $300 அபராதத்தை ‘பாதுகாப்பான இடைவெளி’யைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கும் தூதுவர் ஒருவர் விதித்ததாக ஃபேஸ்புக்கில் செய்தி ஒன்று பரவியது.
அபராதம் வசூலித்தவர் ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் தூதுவர் என்று சமூக ஊடகப் பதிவுகளில் பரவிய நிலையில் அவ்வமைப்பு இதனை மறுத்துள்ளது.
“பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு அரசாங்க முகவைகள் தூதுவர்களை நியமித்துள்ளன. பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய, வர்த்தகங்கள் நடைமுறைகளைச் செயல்படுத்த அவர்கள் வழிகாட்டுவதுடன், அது பின்பற்றப்படுவதை அவர்கள் உறுதி செய்வர். ஆனால், அவர்கள் அபராதம் விதிக்க மாட்டார்கள்,” என்று ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ தெளிவுபடுத்தியது.
அரசாங்கம் பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியதிலிருந்து பொது இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பான இடைவெளியைக் கண்காணிக்கும் தூதுவர்கள், பொது இடங்களைப் பார்வையிட்டு, கூட்ட நெரிசலைக் கண்காணித்து புதிய விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவர்.
பொது இடங்களில், கடைகளில் 10க்கு மேற்பட்டவர்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்வதுடன் அவர்களுக்கிடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பதையும் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். ‘பாதுகாப்பான இடைவெளி’ விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம், சிறைத் தண்டனை போன்றவை விதிக்கப்படலாம்.
உறுதிசெய்யப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
#சிங்கப்பூர் #பாதுகாப்பான இடைவெளி