ஓர் அந்நியர் உங்களை ஒரு ‘வாட்ஸ்அப்’ தொடர்புக் குழுவில் சேர்க்கிறார். ஒரு சுலபமான, ஈர்ப்பான பகுதிநேர வேலைவாய்ப்பை வழங்குகிறார்.
அக்குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களும் சுலபமான பணம், வசதிற்கேற்ப வேலை நேரங்கள், வீட்டிலிருந்து வேலைசெய்யும் சுதந்திரம் என வேலையைப் பற்றிப் புகழ்ந்து பேசுகின்றனர். சிலர் தாம் சம்பாதித்தவற்றைப் படம்பிடித்துக்கூடக் காட்டுகின்றனர்.
கேட்க நன்றாக இருக்கிறதா?
ஒரு சின்ன சிக்கல்: தொடக்கத்தில் சிறு வேலைகளுக்கு சிறிதளவு பணம் நீங்கள் பெற்றதும், “பெரிய தொகை”யைச் சம்பாதிக்க குறிப்பிட்ட பணம் கட்டவேண்டும் என மோசடிக்காரர்கள் சொல்வார்கள்.
இது மோசடி என்பதற்கு இது தெளிவான அறிகுறி, என்றார் காவல்துறை மோசடிப் பொதுக் கல்வி அலுவலகத்தின் உதவி இயக்குநர் காவல்துறை சூப்பரிண்டென்டன்ட் மெத்தியூ சூ.
காவல்துறை சூப்பரிண்டென்டன்ட் சூ, மோசடிக்காரர்கள் “மன ரீதியான உத்திகள்” பயன்படுத்தி ஏமாற்றியதாக விவரித்தார். இவற்றில்:
- வேலை வாய்ப்பிற்குக் குறைந்த நேர அவகாசத்தை வழங்கி அவசரத்தை உண்டாக்குதல்
- ஏமாறுபவர்களைத் தொடர்புக் குழுவில் சேர்த்து, அந்த வேலை வாய்ப்பு உண்மையானது என்பதை அக்குழுவின் மற்ற உறுப்பினர்களின் நல்ல விமர்சனங்கள், பணத்தைப் பெற்ற படங்கள்மூலம் நிரூபித்தல்
- தொடக்கத்தில் தொகைகளை வழங்கி, மேலும் பணம் சம்பாதிக்கத் தம் சொந்த பணத்தைக் கொடுத்துப் பெரிய “வேலைகளை” ஏற்கத் தூண்டுதல்
2023ல், சிங்கப்பூரில் வேலை மோசடிகள்தான் ஆக அதிகமான மோசடிகளாக இருந்தன. 9,914 மோசடிகள் பதிவாகின. ஏமாந்தவர்கள் மொத்தம் $135.7 மில்லியன் அளவு இழந்தனர்.
இந்த மோசடிகள் பொதுவாக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய இணைய வேலைகள் சார்ந்தவை. மோசடிக்காரர்கள், ‘வாட்ஸ்அப்’, ‘டெலிகிராம்’ போன்ற செயலிகளின்வழி, பிரபல தளங்கள் மற்றும் இணைய விளம்பர நிறுவனங்களின் பிரதிநிதிகளாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வர்.
- ஏமாற்றப்பட்டவர்கள் தொடர்புச் செயலிகள், சமூக ஊடகங்களிலிருந்து வேலைவாய்ப்புகளைக் கேட்காமலேயே பெறுகின்றனர். செயலிகளில் உள்ள தொடர்புக் குழுவில் சேர்க்கப்பட்டதும் சிலர் வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடும்.
- சமூக ஊடகப் பதிவுகளிலோ ‘யூடியூப்’, ‘ஸ்போட்டிஃபை’ போன்ற ஊடகத் தளங்களிலோ ‘லைக், ஃபோலோ, கமெண்ட்’ செய்வது போன்ற சுலபமான வேலைகளுக்கு மோசடிக்காரர்கள் தொகைகள் வழங்குகின்றனர். இந்த பொய்யான வேலை பொதுவாகப் பகுதிநேரமாகவும், இணையவழி எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
- முதல் பணியை முடித்ததும், வேலை உண்மையானது என்பதை நிரூபிக்க, ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு சிறிய தொகை வழங்கப்படும்.
- அடுத்து, மோசடிக்காரர்கள் முன்பைவிட அதிகமான தொகைகளை வழங்கும் பணிகளை அறிமுகப்படுத்துவர். ஆனால் இவற்றை ஏற்க, மோசடிக்காரர்களிடம் பணம் கொடுக்கவேண்டும்.
- இம்முறை ஏமாற்றப்பட்டவர்களுக்குத் தொகை வழங்கப்படாது. எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்பது மட்டும்தான் தெரியப்படுத்தப்படும்.
- ஏமாற்றப்பட்டவர்கள் தொடர்ந்து தம் சொந்த பணத்தைக் கொடுத்து, மோசடிக்காரர்கள் வழங்கும் பணிகளைச் செய்யக்கூடும். தாம் சம்பாதித்ததை மீட்டெடுக்கமுடியாதபோது ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்வார்கள்.
வேலை மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துகொள்ளுங்கள்
பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்கேம்ஷீல்டு தற்காப்பு செயலியை சேர்த்துக்கொள்ளுங்கள்
ஸ்கேம்ஷீல்டு செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, பாதுகாப்பு அரணாக, 2 அம்ச அல்லது பல நிலைகளுக்கான உறுதிப்பாடுகளை வங்கிச் செயலிகளுக்கும், சமூக ஊடக சிங்பாஸ் கணக்குகளுக்கும் முறையாக அமைத்துக்கொள்ளுங்கள். பேலா (PayLah),பேநவ் (PayNow), உட்பட்ட இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்கு உச்ச வரம்பை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.
அதிகாரத்துவ வழிகளில் மோசடிக்கான அறிகுறிகளை சோதித்துக்கொள்ளுங்கள்
ஸ்கேம்–ஷீல்டு வாட்ஸ்–அப் போட் செய–லியை go.gov.sg/scamshield-bot மூலம் பயன்–ப–டுத்–துங்–கள். மோச–டித் தடுப்பு நேரடி உதவி எண் 1800-722-6688 அலு–வ–லக நேரத்–தில் அழை–யுங்–கள். அல்லது scamalert.sg இணையத்தளத்தை நாடுங்கள். அதிகாரபூர்வ தளங்கள் வழி வழங்கப்படும் வேலை குறித்த நம்பகத்தன்மையை உறுதி செய்யவும். குறைந்த முயற்சிக்கு அதிக பணம் தருவதும் முதலில் பணம் கேட்கும் வேலை வாய்ப்புகளும் பெரும்பாலும் மோசடிகளாகத்தான் இருக்கும்.
அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லுங்கள்:
மோசடிகளில் சிக்கியிருந்தால் உடனே காவல் துறையிடம் புகார் அளித்துவிடுங்கள். சமூக ஊடகத்தில் உருவாக்கப்பட்ட சந்தேகப்படும் கணக்குகளையும் பின்னணிக் குறிப்புகளையும் தவிர்த்து முடக்கிவிடுங்கள். நடந்த விவரங்களை குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேசிய குற்றத் தடுப்பு மன்றம் ஏற்படுத்தியிருக்கும் மோசடிக்கான வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து மோசடிக்கு எதிராக வழங்கப்படும் ஆலோசனைகளை அறிந்துகொள்ளுங்கள்.