துவாஸ் இரண்டாவது இணைப்பு வழியாக மார்ச் 23ஆம் தேதி நள்ளிரவில் சிங்கப்பூருக்கு நடந்து வந்த இந்தோனீசிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
துவாஸ் சோதனைச்சாவடியில் துணைக் காவல்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
பிடிபட்டவரிடம் அடையாள, பயண ஆவணம் எதுவும் இல்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். குடிநுழைவுக் குற்றம் செய்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதை ஒட்டி இவர் கைதானார்.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவது அல்லது வெளியேறுவதைத் தான் கடுமையாகக் கருதுவதாக ஆணையம் குறிப்பிட்டது.
குற்றம் புரிந்தோருக்கு $1,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று ஆணையம் கூறியது.
2022ல் குடிநுழைவுக் குற்றம் புரிந்த 414 பேர் கைதுசெய்யப்பட்டனர். 2021ல் இந்த எண்ணிக்கை 355ஆகப் பதிவானது.