தன் நிறுவனம் தன்னிடம் ஒப்படைத்த பணத்தைக் கையாடல் செய்துவிட்டு, அது கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகப் பொய் புகார் அளித்த ஆடவர்மீது புதன்கிழமையன்று இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
லெக் தை யோங், 26, என்ற அந்த ஆடவர், நம்பிக்கை மோசடி, காவல்துறை அதிகாரிகளுக்குத் தவறான தகவல் அளித்தல் என்ற இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
‘ஃபிரன்டியர் மின்னிலக்கச் சொத்து நிர்வாக’ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான லெக், தன்னிடம் முதலீட்டாளர்கள் ஒப்படைத்த $270,400 பணத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு முன்னதாக கையாடல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
முதலீட்டாளர்கள் ஒப்படைத்த பணத்தைப் பாசிர் ரிஸ் பூங்காவில் இருவர் கொள்ளையடித்து விட்டதாக அதே நாள் அதிகாலை 3 மணிக்குப் புகார் ஒன்றை லெக் அளித்ததாக காவல்துறை தெரிவித்தது.
புகாரின்மீது விசாரணை மேற்கொண்ட பிடோக் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள், அந்தப் புகார் பொய்யானது என்பதையும் முதலீட்டாளர்கள் ஒப்படைத்த பணத்தை லெக் கையாடியதையும் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, லெக்கையும் பணத்தைக் கையாடல் செய்ய அவருக்குத் துணையாக இருந்த மில்லியன் ஆட்டோ என்னும் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான 26 வயது எடி ஓங் வெய் சியானையும் காவல்துறை கைது செய்தது.
அவர்கள் கையாடிய பணத்தையும் காவல்துறை கைப்பற்றியது.
அவ்விருவர்மீதான வழக்கு விசாரணை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.