விற்பனையாளர்கள், ஃபேஸ்புக் விற்பனை சந்தை, கரோசெல் உட்பட பிற இணைய ஊடகங்கள் வழி சந்தைகளில் பொருட்களை விற்கும்போது, வாங்குபவர்களிடம் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். பொருள்களை வாங்க முனையும் நபர்கள், விற்பனையாளர்களை ஒரு மோசடி வலைத்தளத்திற்கு வழி நடத்திச் செல்கிறார்கள். அவ்வலைத்தளம் பணம் பெற, வங்கி அல்லது கடன் பற்று அட்டை விவரங்களை உள்ளிடுமாறு கேட்கிறது.
2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், குறைந்தது 419 பேர் ஃபேஸ்புக், கரோசெல் ஆகியவற்றில் பொருள்களை வாங்க முனையும் மோசடி செய்பவர்களின் மின் தூண்டிலிடல் மோசடிக்கு ஆளாகியுள்ளனர் என்று சிங்கப்பூர் காவல்துறை கூறுகிறது. மொத்த இழப்பு $1.8 மில்லியனுக்கும் அதிகமானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் தூண்டிலிடல் மோசடி செய்பவர்கள் ஆக அதிகமாக ஃபேஸ்புக், கரோசெல், குறுஞ்செய்திகள் ஆகிய தளங்கள் வாயிலாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டனர் என்று சிங்கப்பூர் காவல்துறை, பிப்ரவரியில் வெளியிட்ட அதன் 2023க்கான மோசடிகள், இணையக் குற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஒரு மோசடியின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஏனெனில் இது ஆரம்பத்தில் ஒரு சுமூகமான பரிவர்த்தனையாகவே தென்படுகிறது. விற்பனையாளர்கள் தங்களது பொருள்களுக்குப் பணம் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர்; சில சந்தர்ப்பங்களில், வாங்குபவர்கள் பொருள்களுக்கான விநியோக ஏற்பாடுகளையும் செய்கிறார்கள்.
இந்த மோசடி ஒரு சாதாரண பரிவர்த்தனையின் பின்னணியில் நடைபெறுவதால், பாதிக்கப்பட்டவர்கள் குறைவான எச்சரிக்கையுடன் இருக்கக்கூடும் என்று சிங்கப்பூரின் காவல் துறை செயல்பாட்டுத் துறையின் மோசடி பொதுக் கல்வி அலுவலகத்தின் துணை இயக்குநர் திரு ஜெஃப்ரி சின் கூறினார்.
“மோசடி செய்பவர்கள் மனித உளவியலில் உள்ள பாதிப்புகளையொட்டிச் செயல்படுவதாக, அறியப்படுகிறார்கள்,” என்று அவர் விளக்கினார்.
“நாம் எச்சரிக்கையாக இல்லாதபோது, ‘அது எனக்கு நடக்காது’ என்ற மனநிலையைக் கொண்டிருக்கும்போதும் அல்லது நம்மைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்காதபோதும் நாம் பாதிக்கப்படுகிறோம்,” என்று திரு சின் மேலும் கூறினார்.
“மோசடி செய்பவர்கள்’’ பாதிக்கப்பட்டவர்களுக்கு, துரிதமாகப் பதில் அளிக்குமாறு அழுத்தம் கொடுக்கலாம், எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் செயல்களின் மோசமான விளைவுகளைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை.”
மின்தூண்டிலிடல் மோசடிகளின் அதிகரிப்பைச் சமாளிக்க, கரோசெல் செய்தித் தொடர்பாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம், இணையம் வழி இயங்கும் சந்தைகளின் அதிக ஆபத்து சூழ்நிலைகளைக் கண்டறிய, தரவு அறிவியல் மாதிரிகளைப் பயன்படுத்துகிறது என்றும் செய்திகளை விரைவாகத் தடுக்கிறது அல்லது சந்தேகத்திற்கிடமான பயனர்களை இடைநீக்கம் செய்கிறது,” என்றும் கூறினார்.
மேலும் மோசடி நடத்தையைக் கண்டறிய அமைப்புகள் இருப்பதால், பயனர்கள் தங்கள் உரையாடல்களை பயன்பாட்டில் வைத்திருக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் செய்தித் தொடர்பாளர், கூறினார்.
“அவர்கள் ‘வாங்கு’ பொத்தானைப் பயன்படுத்தலாம் (எங்கள் தளத்தில் பாதுகாப்பான கட்டணத்திற்கு), இதனால் விற்பனையாளர்களும் வாங்குபவர்களும் தனிப்பட்ட அல்லது கட்டணத் தகவல்களை (பரிவர்த்தனை செய்யும் போது) பரிமாறிக்கொள்ளத் தேவையில்லை”
போலி வாடிக்கையாளரின் மோசடி வழிகள்
- “வாங்குபவர்கள்” என்று காட்டிக் கொள்ளும் மோசடி நபர்கள் கரோசெல் அல்லது முகநூலில் உள்ள பயன்பாட்டுச் செய்திகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அணுகுவார்கள்.
- பாதிக்கப்பட்டவர்கள் விற்பனைத் தளத்தில் பட்டியலிடப்பட்டப் பொருட்களில் அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள்.
- பாதிக்கப்பட்டவர்கள் பொருட்களை விற்க ஒப்புக்கொண்ட பிறகு, மோசடி நபர்கள், அவர்களுக்கு மின்னஞ்சல், பயன்பாட்டு செய்தியிடல் அல்லது குறுந்தகவல் வழியாக தீங்கிழைக்கும் இணைப்பு அல்லது க்யூஆர் குறியீட்டை வழங்குவார்கள். பணம் பெறுதல், பணம் பெறப்பட்டதா என்பதைச் சரிபார்க்க அல்லது விநியோக ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக இணைப்பு அல்லது க்யூஆர் குறியீடு இருக்கலாம்.
- இணைப்புகளைக் கிளிக் செய்தாலோ அல்லது கியூஆர் குறியீடுகளை வருடினாலோ, பாதிக்கப்பட்டவர்கள் போலி வலைத்தளத்திற்குத் திருப்பி விடப்படுவார்கள். அவர்கள் தங்கள் வங்கி அல்லது கடன் பற்று அட்டை விவரங்களை வழங்குமாறு கேட்கப்படுவார்கள்.
- பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி விவரங்கள் அல்லது கடன், பற்று அட்டைகளால் செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைக் கண்டுபிடிக்கும்போது அவர்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்வார்கள்.
உங்கள் பாதுகாப்புக்கு மூன்று வழிகள்
பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்கேம்ஷீல்டு தற்காப்பு செயலியை சேர்த்துக்கொள்ளுங்கள்
ஸ்கேம்ஷீல்டு செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, பாதுகாப்பு அரணாக, 2 அம்ச அல்லது பல நிலைகளுக்கான உறுதிப்பாடுகளை வங்கிச் செயலிகளுக்கும், சமூக ஊடக சிங்பாஸ் கணக்குகளுக்கும் முறையாக அமைத்துக்கொள்ளுங்கள். பேலா (PayLah),பேநவ் (PayNow), உட்பட்ட இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்கு உச்ச வரம்பை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.
அதிகாரத்துவ வழிகளில் மோசடிக்கான அறிகுறிகளை சோதித்துக்கொள்ளுங்கள்
ஸ்கேம்ஷீல்டு வாட்ஸ்அப் போட் செயலியை go.gov.sg/scamshield-bot மூலம் பயன்படுத்துங்கள். மோசடித் தடுப்பு நேரடி உதவி எண் 1800-722-6688 அலுவலக நேரத்தில் அழையுங்கள். அல்லது scamalert.sg இணையத்தளத்தை நாடுங்கள். அதிகாரபூர்வ தளங்கள் வழி வழங்கப்படும் வேலை குறித்த நம்பகத்தன்மையை உறுதி செய்யவும். குறைந்த முயற்சிக்கு அதிக பணம் தருவதும் முதலில் பணம் கேட்கும் வேலை வாய்ப்புகளும் பெரும்பாலும் மோசடிகளாகத்தான் இருக்கும்.
அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லுங்கள்:
மோசடிகளில் சிக்கியிருந்தால் உடனே காவல் துறையிடம் புகார் அளித்துவிடுங்கள். சமூக ஊடகத்தில் உருவாக்கப்பட்ட சந்தேகப்படும் கணக்குகளையும் பின்னணிக் குறிப்புகளையும் தவிர்த்து முடக்கிவிடுங்கள். நடந்த விவரங்களை குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேசிய குற்றத் தடுப்பு மன்றம் ஏற்படுத்தியிருக்கும் மோசடிக்கான வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து மோசடிக்கு எதிராக வழங்கப்படும் ஆலோசனைகளை அறிந்துகொள்ளுங்கள்.