பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த ஆண்டு நவம்பர் 18, 19 தேதிகளில் நடைபெறும் ஜி20 கூட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கெடுக்க சிங்கப்பூருக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது.
ஒரு வருடத்திற்கான ஜி20 கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை டிசம்பர் 1 முதல் இந்தியாவிடமிருந்து பிரேசில் பெற்றுக்கொண்டது.
அனைத்துலக அரங்கில் சிறந்த நல்லுறவையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் இந்த அழைப்பு எடுத்துக்காட்டுகிறது என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சும் நிதி அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நீடித்த நிலைத்தன்மை, பருவநிலை மாற்றம், கல்வி, புத்தாக்கம், முதலீடு, வர்த்தகம் போன்ற பலவற்றில் ஆழமான ஒத்துழைப்பை சிங்கப்பூர் பெற்று வருகிறது எனவும் அந்த அறிக்கை கூறியது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் உள்ள 30 சிறிய, நடுத்தர முறைசாரா உறுப்பினர்களின் உலகளாவிய ஆளுமைக் குழுவின் (3ஜி) நெறியாளராகவும் தேசிய நிலைப்பாட்டுடனும் சிங்கப்பூர் ஜி20 செயல்பாடுகளில் தனது கடமைகளை நிறைவேற்றும் எனவும் அமைச்சுகள் உறுதி கூறின.
பிரேசிலின் தலைமைத்துவத்துடன் இணைந்து ஜி20 உறுப்பினர்களுடனும் அழைக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுடனும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, நீதி நிறைந்த நிலைத்தன்மையான உலகை கட்டமைக்க சிங்கப்பூர் எதிர்பார்க்கிறது எனவும் அமைச்சுகள் கூறின.
சமூக ஒருங்கிணைப்பு, பசிப்பினி போக்குதல், ஆற்றல் பரிமாற்ற நிர்வாகம், நிலைத்தன்மையான மேம்பாடு இவற்றுடன் உலக நிர்வாக சீர்திருத்தம் போன்ற பல அம்சங்கள் அச்செயல்பாடுகளில் அடங்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது.