டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 242ஆகக் குறைந்துள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையப்பக்கம் தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 68 குறைவு. தொடர்ந்து மூன்று வாரங்களாக உயர்ந்துவந்த டெங்கிப் பாதிப்பு, இம்மாதம் 10ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் குறைந்தது. மார்ச் மாதம் முதல் வாரந்தோறும் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து 300க்கும் அதிகமாக இருந்தது. இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து மொத்தம் 11,603 பேர் டெங்கி கிருமியால் பாதிக்கப்பட்டனர். 2015ஆம் ஆண்டு 11,286 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஆண்டின் இந்தக் காலக் கட்டத்தில் பொதுவாக டெங்கிப் பாதிப்பு அதிகமிருக்கும் என்பதால் தற்சமயம் டெங்கிப் பாதிப்பு குறைந்திருந்தாலும் வரும் மாதங்களில் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வாரியம் குறிப் பிட்டுள்ளது. இவ்வாண்டு 30,000க்கும் அதிகமானோர் டெங்கியால் பாதிக்கப்படக்கூடும் என தேசிய சுற்றுப்புற வாரியம் சென்ற பிப்ரவரி மாதத்தில் எச்சரித்திருந்தது. ஆக அதிகமாக 2013ஆம் ஆண்டில் 22,170 பேர் டெங்கிப் பாதிப்புக்கு உள்ளாகினர். இவ்வாண்டில் இதுவரை 7 பேர் டெங்கியால் மாண்டுள்ளனர். சென்ற ஆண்டு முழுவதும் டெங்கியால் மாண்டவர்களின் எண்ணிக்கை நான்காக இருந்தது. தேசிய சுற்றுப்புற வாரியத்தின் 'கிராவிட்ராப்' தகவலின்படி ஏடிஸ் கொசுப் பெருக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.
பிடோக் ரைஸில் வைக்கப்பட்டுள்ள டெங்கி விழிப்புணர்வுப் பதாகை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்