நுகர்வோர் தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இலவச உரை நிகழ்த்த சிங்கப்பூர் நுகர்வோர் சங்கமும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளன. இதன்படி ஆண்டுக்கு 10 இலவச உரை வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நுகர்வோர் உரிமை பற்றி இலவச உரை நிகழ்த்தப்படும். நியாயமற்ற வர்த்தக முறைகளைக் கையாளும் கதவைத் தட்டும் சில்லறை வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஒரு வாரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றார் தென்மேற்கு வட்டார மேயர் குமாரி லோ யென் லிங். இது குறிப்பாக முதியோர், இல்லத்தரசிகள், சில்லறை வியாபாரிகளால் எளிதில் ஏமாற்றக் கூடிய இளம் மாணவர்கள் ஆகியோருக்கு பெரிதும் உதவும் என்றார் கல்வி அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளருமான குமாரி லோ.
நுகர்வோர் பாதுகாப்பு அதாவது நியாயமான வர்த்தக முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இந்த இலவச உரையில் விளக்கப்படும். இடத்திற்கேற்ப இலவச உரை தயார் செய்யப்படும். அதாவது புதிய குடியிருப்புகளைக் கொண்ட தென்மேற்கு வட்டாரத்தில் உரை நிகழ்த்தும்போது, வீட்டுப் புதுப்பிப்புப் பணியின்போது கட்டுமான ஒப்பந்ததாரரை அணுகுவது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு எப்போதாவது ஏதாவது ஒரு சில்லறை வர்த்தகரிடம் தீராத விவகாரம் ஏதும் இருப்பின், அந்த வர்த்தகர் பற்றி எவ்வாறு புகார் அளிப்பது போன்ற விவரங்களையும் இந்த உரையின் வாயிலாகப் பெறலாம். வீட்டுக் கதவைத் தட்டும் சில்லறை வர்த்தகர்கள், நாம் வாங்கும் பொருளுக்கு முன் பணம் செலுத்துவது, சில்லறை வர்த்தகர்களுக்கு எதிராகப் புகார் அளிப்பது போன்ற தகவல்களுடன் மேலும் தகவல்களை இந்த இலவச உரையின்போது அறிந்துகொள்ளலாம். நுகர் வோருக்கான முதல் உரை நேற்று ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் நடந்தது.