தனது தண்ணீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கிட்டத்தட்ட $2.5 மில்லியன் செலவிலான தண்ணீர் ஆய்வு நிலையம் ஒன்றை சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தண்ணீர் துறையில் தகவல் களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் இரண்டு ஒப்பந்தங்களும் நேற்று கையெழுத் திடப்பட்டன. 'குரிட்டா வாட்டர் இண்டஸ் ட்ரீஸ்' எனும் ஜப்பானிய நிறுவனம் இயக்கவிருக்கும் புதிய ஆய்வு நிலையம் வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். பியுபி எனும் பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஜூரோங்கில் இந்த நிலையம் செயல்படவிருக்கிறது.
ஜப்பானுக்கு வெளியே ஆசியாவில் செயல்படவிருக்கும் முதல் ஆய்வு நிலையம் அது. கடல் நீர் சுத்திகரிப்பு, கழிவு நீர் மறுபயனீடு ஆகியவற்றில் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்த நிலையம் கவனம் செலுத் தும். புதிய ஆய்வு நிலையத்தைப் பற்றிய செய்தியை சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று ஷங்ரிலாவின் ராசா செந்தோசா ஹோட்டலில் நடைபெற்ற அனைத்துலக நீர் வார நிகழ்ச்சியில் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பியுபி நிறுவனம் இரு ஒப்பந்தங்களிலும் கையெழுத் திட்டது. சவூதி அரேபியாவின் கடல்நீர் சுத்திகரிப்பு பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய் யப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலிய நீர் கூட்டுறவு அமைப்புடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.