ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள 'மவுண்ட் எலிசபெத்' மருத்துவமனையின் நிர்வாக அலுவலகத்தில் நேற்று காலை தீப் பிடித்ததை அடுத்து, அங்கு பணிபுரிந்திருந்த அறுபது பேர் மருத்துவமனை கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். புளோக் சி-யின் முதலாம் மாடியில் அந்தச் சம்பவம் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.3 மவுண்ட் எலிசபெத் ரோடு எனும் முகவரியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குக் காலை 6.30 மணிக்குக் கிடைத்தது.
நீர்ப்பாய்ச்சும் குழாய்களால் தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர். குடிமைத் தற்காப்புப் படையினரின் வருகைக்கு முன்னதாகவே சம்பவ இடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் ஊழியர்கள்.
இதுவரையில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மருத்துவமனையின் மருத்துவச் சேவைகளும் பாதிக்கப்படவில்லை.
மின்சாரத்தால் தீ மூண்டது என்று முன்னோட்ட விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஆனால் தனிநபர் நடமாட்டச் சாதனங்களாலும் மின்-சைக்கிள்களாலும் தீ ஏற்படவில்லை என்று அது கூறியது.