ரெட்ஹில் வட்டாரத்தில் சனிக்கிழமை மூன்று நபர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. 17 முதல் 55 வயதுடைய அந்த மூவரும் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரெட்ஹில் குளோஸ், புளோக் 88 அருகே காலை 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தக் கைகலப்பில் 55 வயதுடைய ஆடவர் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மூவரில் அந்த ஆடவரும் ஒருவர் என்று அறியப்படுகிறது.
மூவருக்கும் இடையே நடந்த கைகலப்பு ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் இரு இந்திய இளையர்கள் இரு சீன ஆடவருடன் கைகலப்பில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. அருகில் இரு 'கிராப் ஃபூட்' ஊழியர் கைகலப்பைத் தடுக்க முற்படுவதும் தெரிகிறது.
கைகலப்பு ஏன், எப்படி நேர்ந்தது எனும் காரணம் தெரியவில்லை. போலிசார் இச்சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.