பல்வேறு முதலீட்டு மோசடிகள் மூலம் 62 பேரை ஏமாற்றி $500,000த்திற்கும் அதிகமான பணத்தைச் சுருட்டியதைத் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.
கெர் ஜியா ஜுன், 31, என்ற அந்த ஆடவர் 23 பேரை ஏமாற்றி ஏறத்தாழ $300,000 பணம் சுருட்டியதன் தொடர்பில் தன் மீதான 40 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக்கொண்டார்.
எஞ்சிய தொகை தொடர்பில் அவர் மீதான 94 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பான இன்னொரு குற்றச்சாட்டும் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்படும். 2017ஆம் ஆண்டில் இருந்து சென்ற ஆண்டு வரை அவர் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கெர் மீதான ஒவ்வொரு ஏமாற்றுக் குற்றச்சாட்டும் $200 முதல் $40,000 வரை தொடர்புடையது. கெர்ரிடம் ஏமாந்தவர்களுள் அவருடைய நண்பர்களும் அடங்குவர். அவர்களுள் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஏமாற்றப்பட்டனர்.
2017ஆம் ஆண்டில் கெர்ரை சூதாட்டப் பழக்கம் தொற்றிக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட அவருக்குப் பணம் தேவைப்பட்ட நிலையில், மற்றவர்களிடம் பணம் பறிக்கத் திட்டம் தீட்டினார்.
தமது ஃபேஸ்புக் கணக்கு வழியாக மோசடி முதலீட்டுத் திட்டங்கள் பற்றிய பதிவுகளை ஏற்றி, நல்ல லாபம் கிடைக்குமென ஆசையைத் தூண்டினார். இதைக் கண்ட பலரும், அவரது முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவதாக ஃபேஸ்புக் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் அவரைத் தொடர்புகொண்டனர்.
கல்வி நிலையங்கள், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படும் என கெர் அவர்களிடம் கூறினார். மாறாக, அவர்களிடம் பெற்ற பணத்தை சிங்கப்பூரிலும் வெளிநாட்டிலும் உள்ள சூதாட்டக் கூடங்களில் அவர் சூதாடப் பயன் படுத்திக்கொண்டார்.
தமது மோசடிகளை மறைப்பதற்காக, சூதாட்டத்தில் வென்ற தொகையில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் அவர் செலுத்திவந்தார்.
ஒரு கட்டத்தில் எல்லா பணத்தையும் சூதாட்டத்தில் அவர் இழந்துவிட்டார். தம்மிடம் ஏமாந்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, பரிவர்த்தனை வரம்பைத் தாண்டிவிட்டதாக அவர் சாக்குப்போக்கு சொல்லியுள்ளார்.
விழிப்படைந்த சிலர் போலிசில் புகார் அளிக்க, இவ்வாண்டு மார்ச் 5ஆம் தேதி கெர் வியட்னாமில் இருந்து சிங்கப்பூர் திரும்பியபோது, போலிஸ் அவரைக் கைது செய்தது.
தாம் சுருட்டிய தொகையில் இதுவரை நூறாயிரம் வெள்ளிக்கு மேல் அவர் திருப்பித் தந்துவிட்டார்.
வரும் அக்டோபர் 15ஆம் தேதி கெர்ருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும். ஒவ்வோர் ஏமாற்றுக் குற்றத்திற்கும் அவருக்குப் பத்தாண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.