தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையின் முதல் கட்டம் அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் திறக்கப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அறிவித்திருக்கிறார். சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் பயணங்களின் நம்பகத்தன்மையையும் வசதியையும் புதிய ரயில்பாதையின் திறப்பு அதிகரிக்கும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.
புதிய பாதையில் செல்லவிருக்கும் ரயில்களின் ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றிலும் மற்ற ரயில்களில் இருக்கும் நான்கு கதவுகளைவிடக் கூடுதலாக ஐந்தாவது கதவு இருக்கும். பயணிகள் இன்னும் வேகமாகவும் சீரான முறையிலும் ரயிலுக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் புதிய ஏற்பாடு வகை செய்கிறது.அத்துடன், இந்த ரயில்களில் மடக்கக்கூடிய இருக்கைகளும் உள்ளன. உச்ச நேரங்களில் பயணிகள் நிற்பதற்கு அதிக இடத்தை இந்த ஏற்பாடு வழங்குகிறது.
கட்டம் கட்டமாகத் திறக்கப்படும் தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதை, 2024ஆம் ஆண்டுக்குள் முழுமையாகத் திறக்கும். இந்தப் பாதையில் செல்லும் இரண்டு ரயில்களுக்குள் தானியக்க ரயில்தட சோதனைமுறை கட்டமைப்பு பொருத்தப்படும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தது.
கேமராக்கள், உணர்கருவிகள், லேசர் கதிர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள அந்தக் கட்டமைப்பு, தடங்களிலுள்ள விரிசல்கள், அந்நியப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கண்டுபிடிக்கக்கூடியது.
இந்தப் பாதைக்கான 91 ரயில்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. ஜப்பானின் கவாசாக்கி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சீனாவின் சிஎஸ்ஆர் சிங்டாவ் சீஃபாங் நிறுவனமும் இணைந்து ரயில்களை உருவாக்கியுள்ளன.