தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை மூன்று நிலையங்களுடன் தனது முதல் கட்ட சேவையை அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் தொடங்கும். தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் உட்லண்ட்ஸ் நார்த், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சவுத் நிலையங்களின் சேவை அடுத்த ஆண்டின் சீனப் புத்தாண்டுக்கு முன்னால் தொடங்கிவிடும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று அறிவித்தார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் மண்டாய் ரயில் பணிமனையை திரு கோ பூன் வான் நேற்று சுற்றிப் பார்த்த பிறகு இந்த விவரங்களைக் கூறினார். அடுத்த ஆண்டின் சீனப் புத்தாண்டு ஜனவரி 25, 26 தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
நிலையங்கள் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படுவதற்கு முன்னால், சில நாட்களுக்குப் பயணிகள் புதிய ரயில் சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம். பயணிகள் புதிய நிலையங்களுக்கும் வடக்கு-தெற்கு ரயில் நிலைய இணைப்புக்கும் தங்களைப் பழகிக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் முதல் கட்ட சேவை இவ்வாண்டு இறுதியில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னால் தொடங்கும் என்று இவ்வாண்டு ஜனவரி மாதம் கூறியிருந்தார்.
சிங்கப்பூரின் ஆறாவது ரயில் பாதையான தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை மொத்தம் 43 கிலோமீட்டர் நீளமானது. அதில் மொத்தம் 32 ரயில் நிலையங்கள் உள்ளன. உட்லண்ட்ஸ் நார்த் முதல் சுங்காய் பிடோக் வரையிலான அந்தப் பாதையில் எட்டு நிலயங்கள் ரயில் முனையங்களுடன் இணைப்பைக் கொண்டிருக்கும்.
அவை தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையை கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு, வடகிழக்கு, டௌண்டவுன், குராஸ் ஐலண்ட் ரயில் பாதைகளுடன் இணைக்கும்.
“இதனால் நமது ரயில் கட்டமைப்பு இன்னும் அதிகமாக இணைபக்கப்பட்டு, மீள்திறனுடன் செயல்பட்டு பயணிகளுக்கு இன்னும் அதிகமான தெரிவுகளை வழங்கும். இந்த ரயில் பாதை பல கட்டங்களில் கட்டப்பட்டு வருகிறது, ஒவ்வொரு கட்டமும் வெவ்வேறு காலக்கட்டத்தில் திறக்கப்படும்.
“இதனால் பயணிகள் இன்னும் விரைவாகப் பயனடைவார்கள். முழு ரயில் பாதையும் முடியும்வரை காத்திருக்கத் தேவையில்லை,” அமைச்சர் கோ கூறினார்.
முதல் கட்டத்தில் செயல்படவிருக்கும் ஒன்பது ரயில்கள் மண்டாய் பணிமனையில் சோதிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான சோதனை டிசம்பர் மாத பள்ளி விடுமுறையில் நடைபெறும். ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ள மூன்று நிலையங்களில் குறிப்பாக உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அதிகச் சவால்மிக்கதாக அமைந்தது என்று திரு கோ குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 40 ஒலிம்பிக் தர நீச்சல் குளங்களை நிரப்பக்கூடிய 100,000 கியூபிக் மீட்ட அளவு கிரானைட் கற்கள் தகர்க்கப்படவேண்டி இருந்தது என்றும் அவர் சுட்டினார்.
தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு எதிர்கால தலைமுறையினருக்காக போக்குவரத்துக் கட்டமைப்பில் நாம் செய்யும் முதலீட்டுக்கான உதாரணமாக இந்த தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை திகழ்கிறது என்ற அமைச்சர் இப்போதே சிங்கப்பூரின் ஏழாவது ரயில் பாதையான ஜூரோங் வட்டார ரயில் பாதை, எட்டாவது ரயில் பாதையான கிராஸ் ஐலண்ட் ரயில் பாதை ஆகியவற்றின் பணிகளை தொடக்கிவிட்டதாகவும் சொன்னார்.