சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக புகைமூட்டம் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் காற்றைத் தூய்மையாக்கும் சாதனங்களைத் தேடிப் பிடித்து வாங்கி வருகின்றனர். இதனால் மின் சாதனங்களை விற்கும் கடைகளில் காற்றுத் தூய்மை சாதனங்கள் தீர்ந்து வருகின்றன.
நியூபேப்பருக்கு பேட்டியளித்த ‘கோர்ட்ஸ்’ பேச்சாளர் ஒருவர், காற்றைத் தூய்மையாக்கும் சாதனங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.
ஆடியோ நிறுவனம், காற்றைத் தூய்மையாக்கும் சாதனங்களின் விற்பனை கடந்த சில நாட்களாக மும்மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.
இந்த நிலையில் நெக்ஸில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடியில் புகைமூட்டப் பிரச்சினைக்கு உதவும் பொருட்களுடன் ஒரு தனிப் பிரிவு தொடங்கப் பட்டுள்ளது.
‘என்95’ முகக் கவசம், இருமல் மருந்து, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் குடிநீர் போன்றவை அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஃபேர்பிைஸ் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவரான அலெக்ஸ் என்பவர், உடல் ஆரோக்கியம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
திரு அலெக்சும் காற்றைத் தூய்மையாக்கும் சாதனத்தைத் தேடி ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்கு வந்திருந்தார்.
“புகைமூட்டம் எனது கண்களை வெகுவாகப் பாதிக்கிறது. மூச்சுத் திணறல் ஏற்படுவதைப் போல உள்ளது, தொண்டை கரகரப்பாக உள்ளது,” என்று மேலும் அவர் கூறினார்.
இந்தப் புகைமூட்டத்தால் எனது தாயாரும் காற்றைத் தூய்மையாக்கும் இயந்திரத்தை வாங்கவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஹார்வே நார்மன் பேச்சாளர் ஒருவர், புகைமூட்டம் ஏற்பட்டதிலிருந்து காற்றைத் தூய்மையாக்கும் சாதனங்களின் விற்பனை எண்ணிக்கை இரண்டு இலக்குக்கு அதிகரித்துள்ளது என்றார்.
இதற்கிடையே இவ்வார இறுதியிலும் புகைமூட்டம் சிங்கப்பூரை மூடி மறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘எஃப்1’ கார் பந்தயப் போட்டிகளுக்கான பயிற்சிகள் நேற்று தொடங்கின. சிங்கப்பூர் முழுவதும் நேற்று காலை 10 மணியளவில் 24 மணி நேர காற்றுத் தூய்மை தரக் குறியீடு நடுத்தர நிலையில் இருந்தது. சிங்கப்பூருக்கு சாதகமாக காற்று வீசினால் இந்தோனீசியாவிருந்து வீசும் புகைமூட்டம் சிங்கப்பூரை நெருங்காமல் இருக்க வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கம் அளித்த தேசிய சுற்றுப்புற முகவை, அடுத்த 24 மணி நேரத்தில் 24 மணி நேர காற்றுத் தூய்மை குறியீடு நடுத்தர நிலையின் உச்சத்துக்கும் ஆரோக்கியமற்ற நிலையின் கீழ் மட்டத்துக்கும் இைடயே இருக்கும் என்று தெரிவித்தது.
புகைமூட்டமாக இருந்தாலும் ‘எஃப்1’ கார் பந்தயம் நடைெபறும் என்று அது கூறியது.