செழித்துவரும் ஆசியான் பொருளியலால் அதிகபட்சமாகப் பலனடைய வேலைகளுக்கான நிபு ணத்துவத் திறன்களும் மென்திறன்களும் இளம் சிங்கப்பூரர்களுக்குத் தேவைப்படுவதாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்திருக்கிறார்.
தரவு ஆய்வு, தகவல் சேர்க்கை, விமர்சன சிந்தனை போன்றவை நிபுணத்துவத் திறன்களில் உள்ளடங்கும். இளைய சிங்கப்பூரர்
களுக்கு இத்தகைய திறன்களைப் பள்ளிகளும் வேலையிடப் பயிற்சிகளும் கூர்மைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். ஆனால் ஆசியானில் நன்கு செழிக்க அவர்கள் தலைமைத்துவப் பண்புகள், பணித்திட்ட நிர்வாகம், பிற கலாசார மக்களுடன் நன்றாகப் பணியாற்றும் திறன் ஆகியவற்றையும் கற்கவேண்டும் என்று திருவாட்டி ஃபூ சொன்னார்.
ஆசியான் வட்டாரத்தில் பணியாற்றுவது பற்றி இளம் சிங்கப்பூரர்கள் தெரிந்துகொள்வதற்காக உதவும் வழிகாட்டித் திட்டம் ஒன்றின் தொடக்க விழாவில் திருவாட்டி ஃபூ இன்று உரையாற்றினார். தெமாசிக் அறநிறுவனமும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் இளையரணியும் உருவாக்கியுள்ள இந்தத் திட்டம் பல்வேறு நாடுகளையும் துறைகளையும் சேர்ந்த 400 இளையர்களை 36 வழிகாட்டி அதி காரிகளுடன் இணைத்துள்ளது. அந்த வழிகாட்டி அதிகாரிகள், இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளனர்.
பல்வேறு உத்திகளுக்கு இடையே இளம் சிங்கப்பூரர்களின் பழக்க வட்டத்தை மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தவும் ஆழப்
படுத்தவும் வருங்கால பொருளியல் மன்றம் செய்துள்ள பரிந்துரை களை இந்தத் திட்டம் ஆதரிக்கிறது. இந்த மன்றத்திற்கு துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் தலைமை தாங்குகிறார்.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்து ஆசியான் உலகின் நான்காவது பெரும் பொருளியலாகத் திகழக்கூடும் என்பதால் பல நிறுவனங்கள் ஆசியான் பக்கம் திரும்புகின்றன. இதனால் இளையர்களுக்கு வேலைகள் உருவாகியுள்ளதாகக் கூறிய திருவாட்டி ஃபூ, “நம் இளைய சிங்கப்பூரர்கள் ஆவலைத் தூண்டும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம்,” என்றார்.
வாழ்நாள் கற்றலை தேசிய அளவில் வளர்க்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தைப் பயன்படுத்தி நிபுணத்துவத் திறன்களை வளர்த்துக்கொண்டு தொழில்நுட்பம், வட்டார வர்த்தகம் ஆகியவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வது ஒரு வழி என்றார் திருவாட்டி ஃபூ. ஆசியாவில் புதிய நிறுவனங்களின் தொடக்கத்திற்கு ஏற்ற ஆகப் பெரிய சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக வியட்னாம் திகழ்கிறது. இந்த வளர்ச்சிக்கு வலுவான அரசாங்க ஆதரவும் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்த இளைய ஊழியர் அணியும் உந்துதல் அளித்துள்ளன.
இளையர்கள் வட்டார மொழிகளைக் கற்றுக்கொண்டு அண்டை நாடுகளைச் சேர்ந்த மக்களையும் அவர்களது கலாசாரத்தையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
“மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள், சேவைக் கல்வி திட்டங்கள் ஆகியவற்றின்வழி உங்களில் பலர் பயன் அடைந் திருப்பீர்கள்,” என்று விழாவில் கலந்துகொண்ட மாணவர்களிடம் கூறிய திருவாட்டி ஃபூ, தங்களது வேலையிடங்களிலும் இத்தகைய வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடுமாறு அவர்களை ஊக்குவித்தார்.
இவ்வாண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட என்டியுசி ஆய்வில் கலந்துகொண்ட சுமார் 1,200 இளையர்களில் பாதிக்கும் மேற்பட்டோர். ஆசியான் நாடு ஒன்றில் தளம் அமைத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். வெளிநாட்டு வேலை அனுபவத்தால் இன்னும் சிறந்த வேலை வாய்ப்புகள் குவிவதற்கான சாத்தியம், மற்றொரு நாட்டின் கலாசாரம் மற்றும் வேலைச் சூழலின் மீதான ஆர்வம் ஆகியவற்றை இதற்கான முக்கியக் காரணங்களாக அவர்கள் சுட்டினர்.