சிங்கப்பூரின் பொருளியல் 3வது காலாண்டில் மீண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த காலாண்டில் பொருளியல் 0.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.
வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதனை தெரிவிக்கின்றன.
மேலும் முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3வது காலாண் டில் 0.2 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிங்கப்பூரின் பொருளியல் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு 0.5 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடு வரை வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்று அது கூறியது.
இதற்கு முன்பு பொருளியல் வளர்ச்சி பூஜ்யத்திலிருந்து ஒரு விழுக்காடு வரை வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டது.
இரு காலாண்டுகள் தொடர்ந்து பொருளியல் மெதுவடைந்தால் மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று கருதப் படுகிறது.
ஆனால் தற்போது இரு காலாண்டுகளாக பொருளியல் வளர்ச்சியை மேல்நோக்கி நடைபோட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட பொருளியல் புள்ளி விவரங்கள் புளூம்பெர்க்கின் கணிப்பையும் மிஞ்சியுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.4 விழுக்காடு பொருளியல் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்று புளூம்பெர்க் கணித்திருந்தது. ஆனால் அதையும் மிஞ்சி சிங்கப்பூரின் பொருளியல் 0.5 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.
அடுத்த ஆண்டும் பொருளியல் 0.5 முதல் 2.5 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என்று அமைச்சு நேற்று மேலும் தெரிவித்தது.
கட்டுமானத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொருளியல் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தனியார் வங்கியான ‘சிஐஎம்பி’யின் பொருளியல் நிபுணர் சோங் செங் வூன், எதிர்பார்க்கப்பட்டதைவிட 3வது காலாண்டில் பொருளியல் வளர்ச்சி அதிகரித்துள்ளது,” என்றார்.
இந்தப் போக்கு தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளியல் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறிய அவர், வரப்போகும் மாதங்களில் பயனீட்டாளர், வர்த்தகம் ஆகியவற்றின் நம்பிக்கையைப் பொறுத்து அது அமையும் என்றார்.
‘5ஜி’ போன்ற சேவைகள் அறிமுகமாவதால் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகரிக்கும். இதன் மூலம் தயாரிப்புத் துறை வளர்ச்சியடையும் என்று அவர் கூறினார்.