சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எஸ்ஐஏயின் மலிவுக்கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் ஆகியவற்றின் விமானங்கள் ஈரானின் ஆகாய வெளியைப் பயன்படுத்துவதிலிருந்து இன்று (ஜனவரி 8) மாற்றிவிடப்பட்டன.
அமெரிக்காவின் மத்திய வான்வெளி நிர்வாகம் அதன் விமானங்கள் ஈராக், ஈரான், ஓமான் வளைகுடா மற்றும் ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான கடற்பகுதி ஆகியவற்றின் வான்வெளியைத் தவிர்க்கும் என்று கூறியதையடுத்து சிங்கப்பூர் விமான நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் தலைமையிலான படைகள் மீது இன்று அதிகாலை வேளையில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குறிப்பிட்டதையடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஈரான் புரட்சிப் படைத் தளபதி காசிம் சுலைமானியின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றதற்குப் பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குறிப்பிட்டது. திரு காசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டது.
“அமெரிக்கா, ஈரானுக்கு இடையிலான அண்மைய பிரச்சினைகள் காரணமாக ஐரோப்பாவுக்குச் செல்லும், வரும் எஸ்ஐஏ விமானங்கள் ஈரானின் வான்வெளியிலிருந்து வேறு பாதைக்கு மாற்றிவிடப்படுகின்றன. நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப தடங்கள் மாற்றப்படும்,” என்று எஸ்ஐஏயின் அறிக்கை குறிப்பிட்டது.
அது போன்றதோர் அறிக்கையை எஸ்ஐஏயின் துணை நிறுவனமான ஸ்கூட் வெளியிட்டது. சவூதி அரேபியாவின் ஆகாயவெளியைப் பயன்படுத்தப்போவதில்லை என்று அது கூடுதலாகக் குறிப்பிட்டிருந்தது.
கத்தார் ஏர்வேஸ் உட்பட சில நிறுவனங்களின் விமானங்கள் ஈரான், ஈராக்கின் ஆகாயவெளியைத் தொடர்ந்து பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.
அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பிருந்தே கொரியன் ஏர்லைன்ஸ், தாய் ஏர்வேஸ் நிறுவனங்கள் ஈரான், ஈராக் ஆகாய வெளியைத் தவிர்த்திருந்தன.
மலேசிய ஏர்லைன்ஸ், தைவானின் சைனா ஏர்லைன்ஸ், ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் ஏர்வேஸ் போன்றவை ஈரான், ஈராக் வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகவும் அவற்றின் விமானங்கள் வேறு பாதையில் மாற்றிவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஐஏடிஏ எனப்படும் அனைத்துலக வான்வழி போக்குவரத்துச் சங்கம், விமானங்களின் பாதை மாற்றிவிடப்படுவதைக் கையாளவும் ஒருங்கிணைக்கவும் குழு ஒன்றைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity