அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் மாண்ட ஈரானின் புரட்சிப்படைத் தளபதி மேஐர் ஜெனரல் காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று கலந்துகொண்டு துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். டெஹ்ரான் பல்கலைக்கழக வளாகத்தில் சுலைமானியின் உடல் இறுதி அஞ்சலிக்காகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஈரானின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா காமெனி, அதிபர் ஹசான் ருஹானி உட்பட மற்ற தலைவர்களும் சுலைமானியின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்னால் நின்று இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது ஆயத்துல்லா காமெனி சோகத்தை அடக்கமுடியாமல் கண்ணீர் வடித்தார். ஆயத்துல்லா காமெனியுடன் சுலைமானி நெருக்கமான உறவு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஈரானியர்கள் அமெரிக்காவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அவர்களிடம் பேசிய சுலைமானியின் மகளான ஸைனாப், மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்கப் படையினர் தாக்கப்படுவர் என்று மிரட்டல் விடுத்துள்ளார். “மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் கொல்லப்படுவர்.
“அவர்களது மரணச் செய்திக்காக அமெரிக்காவில் இருக்கும் அவர்களது குடும்பத்தினர்கள் ஒவ்வொரு நாளும் காத்துக்கொண்டிருப்பர்,” என்று கனல் கக்கும் சொற்களை அவர் வெளியிட்டபோது கூடியிருந்தோர் ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில், சுலைமானியின் மரணத்துக்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அமெரிக்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் சுலைமானிக்குப் பதிலாக ஈரானின் புரட்சிப்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள இஸ்மாயில் கானி சூளுரைத்துள்ளார்.
“அமெரிக்காவுக்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார். இதற்கிடையே, 2015ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அணுவாயுத ஒப்பந்தக் கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
டிரம்ப்: பழிவாங்கினால் அழிவு நிச்சயம்
சுலைமானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈரான் இறங்கினால் அந்நாட்டின் கலாசாரத் தளங்களை அமெரிக்கா அழித்துவிடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானியக் கலாசாரத்துக்கு முக்கியமான 52 இடங்கள் தாக்கப்படும் என்றார் அவர். இதற்கிடையே, அதிபர் டிரம்ப்பின் உத்தரவின் பேரில் சுலைமானி கொல்லப்பட்டதைக் கண்டித்து வாஷங்டனிலும் மற்ற அமெரிக்க நகரங்களிலும் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானுக்கு எதிராகப் போர், தடைகள் வேண்டாம் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.