சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் மேலும் இரண்டு புதிய பட்டப்படிப்புகளைச் சேர்த்துள்ளது.
‘ஸ்பீச் அண்ட் லாங்குவேஜ் தெரபி’ என்னும் பேச்சு மற்றும் மொழி பிறழ்வு சிகிச்சை, ‘டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்டகிரேட்டட் மீடியா’ என்னும் மின்னியல் தகவல் மற்றும் ஒருங்கிணைந்த ஊடகம் ஆகியவையே அந்த புதிய பட்டப்படிப்புகள். இந்த இரண்டு பட்டப் படிப்புகளும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளன. ‘ஸ்பீச் தெரபி’ இளங்கலைப் பட்டப்படிப்பு சிங்கப்பூரில் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஸ்பீச் தெரபி முதுகலைப் பட்டப்படிப்பு மட்டுமே இப்போது உள்ளது. இந்தத் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயில வேண்டுமெனில் ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டும்.
இந்த நாடுகளில் இதற்கு ஆகும் செலவு 100,000 வெள்ளியைத் தாண்டும். ஆனால் இப்போது எஸ்ஐடியில் தொடங்கப்படவிருக்கும் நான்காண்டு இளங்கலைப் பட்டப்படிப்புக்கு ஏறக்குறைய $37,000 செலவாகும்.
இதுகுறித்துப் பேசிய செங்காங் பொது மருத்துவமனையின் ஸ்பீச் தெரபி துறையின் தலைவர் குமாரி மெல்லிசா சுவா, “பேசுவதற்கு சிரமப்படுபவர்கள், சாப்பாட்டை விழுங்க சிரமப்படுபவர்கள் ஆகியோருக்கு இந்த ‘ஸ்பீச் தெரபி’ சிகிச்சை தேவைப்படும்,” என்றார்.
அத்துடன் ஆட்டிசம் குறைபாடுகளைக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் இதுபோன்ற நிபுணர்களின் சிகிச்சை தேவைப்படும்.
“முக்கியமாக இதுபோன்ற சிகிச்சை நிபுணர்கள் சிங்கப்பூரில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் உள்ளூர்ச் சூழலுக்கேற்ப அவர்களால் நோயாளிகளுக்குப் பயிற்சியளிக்க முடியும்,” என்றும் அவர் கூறினார். பேச்சு மற்றும் பிறழ்வு சிகிச்சை நிபுணர்களுக்கான தேவை சிங்கப்பூரில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தப் பட்டப்படிப்பு இங்கு அறிமுகப்படுத்தப்படுவதாக எஸ்ஐடி நேற்று தெரிவித்தது. பேச்சு வராமல் தவிக்கும் இளங்குழந்தைகள் மற்றும் வாத நோயால் பாதிக்கப்பட்டு பேசுவதற்கு சிரமப்படும் முதியவர்கள் ஆகியோருக்கு பேச்சு சிகிச்சை அளிக்க இந்தக் கல்வி உதவும்.