அடுத்த தலைமுறை வர்த்தக முதலாளிகள், வேகமாக வளர்ந்துவரும் நிறுவனங்களின் நிறுவனர்கள் போன்றவர்கள் புதிய நிரந்தரவாசம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் மூலம் பயனடைவர் என்று கூறப்படுகிறது.
பெரும் முதலீட்டாளர்கள், தொழில்முனைவர்கள் போன்றவர்களுக்கு சிங்கப்பூரின் நிரந்தரவாசத் தகுதியை வழங்கி அவர்களை ஈர்க்கும் விதத்தில் இந்தப் புதிய மாற்றங்கள் உள்ளன.
GIP எனப்படும் அனைத்துலக முதலீட்டாளர் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் இந்தப் புத்தாண்டில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த மாற்றங்கள் வரும் மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.
சில குறிப்பிட்ட துறைகளில் அடுத்த தலைமுறை வர்த்தக முதலாளிகள், வேகமாக வளர்ந்துவரும் நிறுவனங்களின் நிறுவனர்கள், பெரும் செல்வந்தர்களின் நிதி நிர்வாகத்தை மேற்கொள்ளும் முதலீட்டு நிறுவனங்களின் முதல்வர்கள் போன்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூரின் நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பிக்க இயலும்.
நன்கு செயல்படும் வர்த்தக நிறுவனங்களின் முதலாளிகள், தொழில்முனைவர்கள் மட்டுமே அத்தகைய விண்ணப்பத்தைச் செய்ய தற்போது இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.
GIP திட்டத்தை மேற்பார்வையிடும், சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஒரு பிரிவான ‘கான்டேக்ட் சிங்கப்பூர்’ அமைப்பின் இயக்குநரான திரு மேத்யூ லீ, “புதிய வர்த்தக வாய்ப்புகள், புதிய தொழில்முனைவர்கள் மற்றும் வர்த்தக முதலாளிகளை உருவாக்கும் விதத்திலான அனைத்துலக பொருளியல் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்றார்.
கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட GIP திட்டத்தின்கீழ், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களின் GIP நிதியிலோ அல்லது சிங்கப்பூரில் வர்த்தகத்தைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த குறைந்தபட்சம் $2.5 மில்லியன் முதலீடு செய்யும் வெளிநாட்டவர் சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பிக்க இயலும்.
GIP திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி, நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் $500 மில்லியன் மதிப்பிலான, வேகமாக வளர்ந்துவரும் நிறுவனத்தில் ஆகப் பெரிய பங்குதாரர்களில் ஒருவராக இருக்க வேண்டும்.
முதலீடுகளின் வழியாக நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் மொத்த முதலீட்டு சொத்து குறைந்தபட்சம் $200 மில்லியனாக இருக்க வேண்டும்.
நன்கு செயல்படும் வர்த்தக நிறுவனங்களின் குறைந்தபட்ச வருமான வரம்பு தற்போது நடப்பிலுள்ள $50 மில்லியனிலிருந்து, மார்ச் மாதம் முதல் $200 மில்லியனாக உயர்த்தப்படும்.
அத்தகையோரின் நிரந்தரவாசத் தகுதி புதுப்பிக்கப்படுவதற்கான எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய வர்த்தக முதலாளிகளின் வருடாந்திர வர்த்தகச் செலவு தற்போது நடப்பிலிருக்கும் $1 மில்லியனிலிருந்து $2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளன.
மாற்றம் செய்யப்பட்ட GIP திட்டத்தின்கீழ், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பிக்க, புதுப்பிக்கத் தேவையான தகுதிகள் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, அதற்குள்ளாக விண்ணப்பித்துவிடும் நோக்கில் அதிக எண்ணிக்கையிலான சீன நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த மாதத்தில் விண்ணப்பிக்க முற்படுவதாக குடிநுழைவு ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குநர் டேனியல் சானி லிம் குறிப்பிட்டார்.
#gip #தமிழ்முரசு #சிங்கப்பூர்நிரந்தரவாசத்தகுதி