சிங்கப்பூரைப் பற்றியும் இங்குள்ளவர்கள் எவ்வளவு அன்பானவர்கள் என்பது பற்றியும் திருமதி ஜியாங் ஏற்கெனவே கேள்விபட்டிருந்தார். எனவே, விடுமுறைக்காக இவரை சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்க இவரது மகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
ஆனால், இங்கு வந்த மூன்றே நாட்களில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாவோம் என திருமதி ஜியாங் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நபர் இவர்.
சிகிச்சை நிறைவடைந்த பின்னர் நேற்று முன்தினம் இவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
தாம் வெளிநாட்டவர் என்ற போதிலும், தமக்கு சிறந்த முறையில் பராமரிப்பு வழங்கிய மருத்துவ ஊழியர்களுக்கு திருமதி ஜியாங் புகழாரம் சூட்டினார்.
“எனக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது குறித்து நான் அஞ்சவில்லை. ஏனெனில், இங்கு அற்புதமான மருத்துவக் குழு உள்ளது. இந்த அனுபவம் மூலம் நான் மேலும் தைரியமாகியுள்ளேன்,” என்றார் இவர்.
கடந்த மாதம் 21ஆம் தேதி காலை திருமதி ஜியாங் சிங்கப்பூர் வந்தார். ஆனால், அதே நாள் பிற்பகலில் இவருக்கு உடல்நலம் சரியில்லை.
அடுத்த நாள் இவருக்கு இருமலும் காய்ச்சலும் ஏற்படும் வரை நிலைமையை இவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை.
அதையடுத்து, உடல்நலத்தைப் பரிசோதிக்க ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு இவர் சென்றார். கிருமித்தொற்று தொடங்கிய சீனாவின் வூஹான் நகரிலிருந்து இவர் வந்ததால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் டான் டோக் செங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ராஃபிள்ஸ் மருத்துவமனை இவரை அனுப்பி வைத்தது. பின்னர் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்திற்கு மாற்றிவிடப்பட்ட இவர், அங்கு தனிமைப்படுத்தப்பட்டார்.
“எனக்குச் சாதாரண சளி, காய்ச்சல்தான் ஏற்பட்டது என்று நினைத்தேன். ஏனெனில், இதுபோன்ற அறிகுறிகள் எனக்கு முன்னதாக பலமுறை தென்பட்டிருந்தன,” என்றார் திருமிதி ஜியாங்.
எனினும், எது ஏற்படக்கூடாது என இவர் அஞ்சினாரோ, அது நடந்துவிட்டது. கொரோனா கிருமித்தொற்றால் இவர் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
மருத்துவ உதவியை நாடுவதற்கு முன்பு திருமதி ஜியாங் எம்ஆர்டி ரயில், டாக்சிகளில் ஏறி ஆர்ச்சர்ட் சாலை, மரினா பே சேண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டங்கள் ஆகிய இடத்திற்குச் சென்றிருந்தார்.
ஆனால், குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ள இவர், கூடிய விரைவில் தாயகம் திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறார்.
இம்மாதம் 5ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து வூஹானுக்கு தனி விமானம் ஒன்று புறப்பட்டதைச் சுட்டிய இவர், அதில் பயணம் மேற்கொள்ள உரிய நேரத்தில் மருத்துவமனையிலிருந்து தம்மை விடுவிக்க முடியாததற்கு மருத்துவர் மன்னிப்புக் கோரியதாகச் சொன்னார்.
“பொறுப்புடன் நடந்துகொண்ட உங்களுக்கு நான்தான் நன்றி கூற வேண்டும் என்று அவரிடம் நான் கூறினேன்,” என்றார் திருமதி ஜியாங்.