மெக்டோனால்ட் விரைவு உணவகம் நாளை முதல் அதன் சேவைகளைத் தொடங்கவுள்ளது. சாப்பாடு வாங்கிச் செல்வது, வீட்டுக்கு அனுப்பி வைப்பது, வாகனத்தில் இருந்தபடி வாங்கிச் செல்வது ஆகிய சேவைகளை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று அதன் ஃபேஸ்புக் பக்கம் தெரிவித்துள்ளது.ஆனால், மெக்டோனால்ட் உணவகங்களுக்கு விரைய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை அது வலியுறுத்தியது.
பெரும்பாலான உணவகங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்று மெக்டொனால்ட் நிறுவனம் தெரிவித்தது.
கொரோனா கிருமி பரவல் முறியடிப்பு காலத்தில் இது 24 மணி நேர சேவையை மெக்டொனால்ட் வழங்காது. அதன் இனிப்பு கூடங்களும் மெக்கஃபே கூடங்களும் மூடப்பட்டிருக்கும்.
சில உணவகங்கள் வெவ்வேறு நேரங்களில் செயல்படும். மேலும் பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், சில கல்வி நிறுவனங்களில் அமைந்திருக்கும் உணவங்கள் மூடப்படும்.
வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சேவைகளுக்காக மெக்டோனால்ட் உணவகங்களுக்குச் சென்றால், உடல் வெப்பநிலை சோதனை, பாதுகாப்பான இடைவெளி, பாதுகாப்பான நுழைவு பதிவு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
வாடிக்கையாளர்கள் தங்கள் உணவு கோரிக்கைகளை ‘மெக்டெலிவரி’ வழியாகவும் மேற்கொள்ளலாம். இச்சேவைக்கு ரொக்கமில்லா கடட்ணம் அல்லது கிராப்ஃபுட் கட்டணங்களை மட்டுமே செலுத்தமுடியும்.
ஒன்பது வெவ்வேறு மெக்டோனால்ட் உணவகங்களில் பணிபுரியும் அதன் ஏழு ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து மெக்டொனால்ட் கிளைகளும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 11 மணி முதல் மூடப்பட்டன.
விரைவு உணவு நிறுவனமான மெக்டொனால்ட் அதன் 135க்கும் மேற்பட்ட அனைத்து உணவகங்களின் செயல்பாட்டையும் மே 4 ஆம் தேதி வரை இடைநிறுத்துமாறு காதார அமைச்சு அறிவுறுத்தியது.
பாதிக்கப்பட்ட ஏழு ஊழியர்களில் அறுவர் உணவக மேலாளர்களும் ஒரு சேவையாளரும் அடங்குவர் என்றும் அவர்களில் எவரும் விநியோகிப்பாளர் இல்லை என்றும் மெக்டொனால்டு செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.