ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவக்கூடிய சளிக்காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றுக்காக கடந்த இரு மாதங்களில் மருத்துவர்களை நாடுவோர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. நல்ல சுகாதாரம், பாதுகாப்பான இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவாக, 2,500 முதல் 3,000 வரையிலானோர் இத்தகைய பிரச்சினைகளுக்காக பலதுறை மருந்தக மருத்துவர்களை நாடி வந்தனர்; ஆனால், அந்த எண்ணிக்கை இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே 700க்கும் குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 20 பலதுறை மருந்தகங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளிலிருந்து இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
அதேபோல, வயிற்றுப்போக்கு, கண் வலி மற்றும் கை, கால், வாய்ப் புண் போன்றவற்றுக்காக மருத்துவர்களை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இத்தகைய போக்கை பார்க்வே ஷென்டான் மருத்துவக் குழுமமும் கவனித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே அங்கு சுவாசப் பாதை தொற்றுகளுக்காக சிகிச்சைக்குச் செல்வோரின் எண்ணிக்கை 50% வரை குறைந்திருப்பதாக அந்தக் குழுமம் தெரிவித்துள்ளது.
கிருமிப்பரவலை முறியடிக்கும் அதிரடி நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதாலும் வீட்டைவிட்டு வெளியில் செல்வோர் முகக்கவசம் அணிந்திருப்பதாலும் இது சாத்தியமாகியிருக்கலாம் என்று அந்தக் குழுமத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எட்வின் சிங் கூறினார்.
கொரோனா கிருமித்தொற்று சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, பாதுகாப்பான இடைவெளி போன்றவற்றைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்ற நல்ல சுகாதாரம் சார்ந்த பழக்கங்களை கொவிட்-19 அச்சுறுத்தல் தீர்ந்த பிறகும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பெரேரா குறிப்பிட்டார்.
மனிதர்களுக்கிடையே பரவும் தொற்று நோய்ப் பரவல் குறைந்துள்ள வேளையில், டெங்கி பாதிப்பு எண்ணிக்கை சிங்கப்பூரில் உயர்ந்துள்ளது. இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை சுமார் 7,000 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online