ஜூலை 20 முதல் ஜப்பான், ஹாங்காங், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் ஆகிய இடங்களுக்குச் சென்று சிங்கப்பூர் திரும்பும் பயணிகள் தங்கள் இல்லங்களைத் தவிர, தனிமைப்படுத்தலுக்காக சிறப்பாக ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களில் 14 நாட்களுக்குத் தங்க வைக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிவதற்கும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வோங் இன்றைய மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தின்போது கூறினார்.
குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என்ற அறிவுரையை மீறி மார்ச் மாதம் 27ஆம் தேதிக்குப் பின்னர் சிங்கப்பூரிலிருந்து சென்றவர்கள் குறிப்பிடப்பட்ட தங்குமிடத்தில் 14 நாட்கள் தங்குவதற்கான செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோரும் அந்தக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும். 14 நாள் தங்குவதற்கான கட்டணம் சுமார் $1,500 ஆகும் என்றும் ஒருவருக்கான கொவிட்-19 சோதனைக்கான கட்டணம் $200 ஆகும் என்றும் அறியப்படுகிறது.
கொவிட்-19 கிருமித் தடுப்புக்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை இக்கிருமித் தொற்றுக்கான தீர்வு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறினார் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்.
அதுவரை கிருமித்தொற்று சமூகத்தில் இருக்கும் என்றும் அதோடு சேர்ந்து பாதுகாப்பாக வாழ்வதற்கான வழிகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அனைவரும் தொடர்ந்து கவனத்துடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும் என்று கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர்கள் இருவரும் தெரிவித்தனர்.