இவ்வாண்டின் தேசிய தினத்திற்கான கொண்டாட்டங்களின் அங்கமாக புதிய ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தொடங்கப்படும்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியிலுள்ள முக்கிய சின்னங்கள் இந்தப் பாதையில் இடம்பெறும்.
இது தொடர்பான அறிவிப்பை துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட், இன்று காலை இணையம் வழியாக நடந்தேறிய தேசிய தின அனுசரணை விழாவின்போது கூறினார்.
"ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டங்களின் அங்கமாக நானும் இதே குழுத்தொகுதியைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் அடுத்த வாரம் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று செல்லவிருக்கிறோம்," என்று திரு ஹெங் தெரிவித்தார்.
"ஈஸ்ட் கோஸ்ட் விரிவான, பன்முகத்தன்மை வாய்ந்த வட்டாரமாக உள்ளது. பிடோக் டவுன் சென்டர் முதல் புலாவ் உபின், பெட்ரா ப்ராங்கா வரையிலான இடங்கள் இந்த வட்டாரத்தில் அடங்குகிறது," என்று அவர் கூறினார்.
இந்த இணைய விழாவில் 500க்கும் அதிகமான பிடோக் வட்டாரவாசிகள் ஸூம் செயலி வழியாகவும் ஃபேஸ்புக் வழியாகவும் இணைந்தனர்.
ஒற்றுமை, உறுதி மற்றும் மீள்திறனுடன் சிங்கப்பூரர்கள் கொவிட்-19 கிருமிப்பரவலை எதிர்கொண்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக திரு ஹெங் தெரிவித்தார். "எல்லோரும் பங்காற்றியுள்ளனர். இந்நிலைமை மாறிவர தியாகங்களையும் மாற்றங்களையும் அவர்கள் செய்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு மத்தியில் எங்களது சுகாதார ஊழியர்களும் முன்கள ஊழியர்களும் உள்ளனர். இவர்களது கடமையுணர்வு எங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளது," என்று அவர் கூறினார்.