நிதித் துறையின் உயர்நிலை நிர்வாகப் பொறுப்புகளில் சிங்கப்பூர் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த சிங்கப்பூர் நாணய ஆணையம் வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
ஆணையத்தின் தலைமை நிர்வாகி ரவி மேனன், “தற்போதைய பொருளியல் சூழலில் சிங்கப்பூரர்களின் வேலைகளைப் பாதுகாப்பது, பெருக்குவது எங்களது தலையாய முன்னுரிமை,” என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ரேமண்ட் கோ எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாகக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி எழுதிய கடிதத்தில், “மூத்த ஓய்வுபெற்ற வங்கியாளர் என்ற முறையில், கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் நிதித் துறையில் உயர்நிலை மற்றும் நடுநிலை நிர்வாகப் பொறுப்புகளில் வெளிநாட்டினர் பலர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியும்,” என்று ரேய்மண்ட் கோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த திரு மேனன், “ஒவ்வொரு நிதி அமைப்பிலும் நமது இலக்கை இன்னமும் எட்டவில்லை என்றபோதிலும், பல சமயங்களில் வெளியில் தெரிவதைவிட நிதித்துறையில் உள்ள நிலவரம் நன்றாகவே உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
நிதித்துறையில் சிங்கப்பூர் குடிமக்கள் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் உள்ளதாக தான் மதிப்பிடுவதாகக் கூறும் திரு மேனன், மேலும் சுமார் 14 விழுக்காட்டினர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் என விளக்கினார். அத்துடன், நிதித் துறையில் உயர்நிலை நிர்வாகப் பொறுப்புகளில் சிங்கப்பூரர்கள் விகிதம் 43 விழுக்காடு என்பதையும் திரு மேனன் சுட்டிக் காட்டினார்.
கொவிட்-19 கொள்ளைநோய் தலைவிரித்தாடுவது ஒரு பக்கம், பொருளியல் சரிவு மறுபக்கம் என்ற சூழ்நிலையில் ெவளிநாட்டு திறனாளர்கள் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இதில் செய்தித்தாள்களின் வாசகர் கடிதப் பகுதியில் அரசாங்கம் தனது ஊழியர் கொள்கையை மறுபரிசீலனை செய்வதுடன் எம்பிளாய்மெண்ட் பாஸ் வழங்குவதைக் குைறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வெளிநாட்டினரை உள்ளூர் பணியாளர்கள் போட்டியாளர்களாகக் கருதாமல் அவர்களை இணைந்து பணி செய்பவர்களாகக் கருத வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.