எச்ஐவி தகவல் கசிவு: மருத்துவப் பதிவேட்டிலிருந்து மருத்துவர் நீக்கம்

எச்ஐவி தகவல் கசிவு: மருத்துவப் பதிவேட்டிலிருந்து மருத்துவர் நீக்கம்

2 mins read
635c34d4-02dc-4853-8267-0c393ad8ddc5
தாம் செய்த குற்றத்தால் எந்தவித தீங்கும் விளைவிக்கப்படவில்லை  என்றும் இதன் மூலம் தமக்கு எந்தப் பலனுக்கும் கிடைக்கவில்லை என்றும் லெர் கூறுவது சரியல்ல என்று நடுவர் மன்றம் கூறியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த ஆண்டு ஜனவரியில் எச்ஐவி பெயர்ப்பட்டியல் கசிவு சம்பவத்துடன் தொடர்புடைய மருத்துவர் லெர் டெக் சியாங், மருத்துவர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் மருத்துவர் மன்றத்தின் ஒழுங்கு நடுவர் மன்றம் நேற்று முன்தினம் இதனைத் தெரிவித்தது.

சுகாதார அமைச்சின் தேசியப் பொதுச் சுகாதாரப் பிரிவின் தலைவராக இருந்த லெர், மிக்கி ஃபெரேரா புரோச்செஸுக்கு இருந்த எச்ஐவி தொற்றை அதிகாரிகளிடமிருந்து மறைக்க உதவியதோடு புரோச்செஸ் சிங்கப்பூரில் பணிபுரிவதற்கும் துணைபுரிந்தார்.

இதுகுறித்து நடுவர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவப் பணியைத் தொடர லெர் தகுதியற்றவர் என்று கண்டறியப்பட்டதாகக் கூறியது. பேராசிரியர் வால்ட்டர் டான், இணைப் பேராசிரியர் டான் டோங் கீ, திரு பாலா ரெட்டி ஆகியோர் நடுவர் மன்றத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் லெரின் நடத்தையால் பெரும் தீங்கு விளைவிக்கப்பட்டதாகவும் அவர் மீதான குறைகூறத்தக்க நிலை அதிகமாக இருப்பதை அவர் புரிந்த குற்றங்கள் காட்டுவதாக நடுவர் மன்றம் கூறியது. எனவே, அவருக்கு ஆகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அது தீர்ப்பளித்தது.

தாம் செய்த குற்றத்தால் எந்தவித தீங்கும் விளைவிக்கப்படவில்லை என்றும் இதன் மூலம் தமக்கு எந்தப் பலனுக்கும் கிடைக்கவில்லை என்றும் லெர் கூறுவது சரியல்ல என்று நடுவர் மன்றம் கூறியது.

"அரசாங்க அதிகாரிகளை ஏமாற்றுவதில் லெர் ஒருமுறையோடு நிறுத்திவிடவில்லை. பல ஆண்டுகளாக அவர் நான்கு முறை அதிகாரிகளை ஏமாற்றினார். தமது குற்றங்களைச் சுகாதார அமைச்சிடமும் போலிசிடமும் மறைக்க லெர் பொய் வாக்குமூலங்களை அளித்தார்," என்று நடுவர் மன்றம் சொன்னது.

லெரின் நடத்தையால் மருத்துவத் துறை மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் அவர்களது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கப்பட்டதாக நடுவர் மன்றம் கருதுகிறது.

நடுவர் மன்ற விசாரணைக்கான செலவை லெர் ஏற்க வேண்டும் என்று மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோசடி செய்தது, அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை அளித்தது போன்ற குற்றச் செயல்களில் ஃபெரேரா புரோச்செஸ் ஈடுபடுவதற்குத் துணைபோன லெருக்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், போதைப்பொருள் குற்றங்களுக்காக அவருக்கு 15 மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்