இந்திய மரபுடைமை நிலையம் 6ஆம் முறையாக நடத்தும் ‘கல்சர்ஃபெஸ்ட்’ (CultureFest) என்னும் கலாசார விழா முதல்முறையாக மெய்நிகர் முறையில் நிகழவிருக்கிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி (நேற்று) தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நீடிக்கும் இவ்விழாவில் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ராமாயண இதிகாசத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமையும் இவ்விழாவில் கலாசாரப் படைப்புகள், குழு கலந்துரையாடல்கள், பயிலரங்குகள், கதைசொல்லும் அங்கங்கள், சமையல் செயல்முறை விளக்கங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதுபோக இந்திய மரபுடைமை நிலையத்தில் மதுபானி பாரம்பரிய ஓவியக் கலைஞரான திருமதி குமுதா குரோவிடி வரைந்த ஆறு ஓவியக் கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகக் கலைப் பணியில் ஈடுபட்டு வரும் குமுதா ‘ஸ்ட்ரோக் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ’ என்னும் கலை நிறுவனத்தை 2014ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.
ராமாயணத்தின் ஆறு நூல்களை மையமாக வைத்து மதுபானி ஓவியக் கலைமுறையில் இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த ஓவியங்களை உருவாக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எடுத்தன என்றும் ஓர் ஆண்டு ஆராய்ச்சிக்கு செலவழிக்கப்பட்டது என்றும் சொன்னார் குமுதா, 54.
“ராமர்-சீதை திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட கலைமுறைதான் மதுபானி. அதனாலே இந்த கலை வகை, கொண்டாட்டங்களுக்கு உகந்தது. திருமணங்கள், குழந்தை பிறப்பு, அறுவடை விழாக்கள் என எவ்விதக் கொண்டாட்டத்திற்கும் சரி, இந்தக் கலை வகை வண்ணமயமானது, துடிப்பானது, நுண்ணி யமானது, அப்பாவியான குழந்தை தன்மையைப் பிதிபலிக்கக்கூடியது,” என்றார் குமுதா.
மதுபானி கலை பட்டறை ஒன்று செப்டம்பர் 12ஆம் தேதி இணையம்வழி நடைபெறும். அதுபோக நேரில் சென்று மதுபானி கலையில் ஒவியம் தீட்டவும் அடுத்த இரண்டு வார இறுதி நாட்களிலும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த ஆண்டின் கலாசார விழாவில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களும் நிபுணர்களும் உட்பட்ட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தெமாசெக் பலதுறைத் தொழில் கல்லூரியில், தொடர்பு வடிவமைப்புத் துறை மாணவர்களுடன் இணைந்து கல்சர்ஃபெஸ்ட் விழாவின் சின்னத்தையும் முக்கிய காட்சியையும் தயாரித்துள்ளனர்.
இவ்வாண்டின் சூழலைக் கருதி யும், பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் இணங்க மின்னிலக்க முறையில் கலாசார விழா தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது நிர்வாகியான திருமதி மரியா பவானி தாஸ்.
“சிங்கப்பூரில் உள்ள பலதரப்பட்ட இந்திய கலைகள், பண்பாடு, மரபு, இவற்றை எல்லாம் வெளிக்காட்டவும், விழிப்புணர்வை ஏற்
படுத்தவும் இந்த விழா ஒரு சிறப்பான தளமாக இருக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் மரியா.
மின்னிலக்க முறையில் விழா நிகழ்ச்சிகள் நடப்பதால் எப்போது வேண்டுமானாலும் மக்கள் அதைப் பார்க்கலாம் என்றும் மற்றவர்
களோடு பகிர சமூக ஊடகங்கள் வழிவகுக்கின்றன என்றும் கூறிய திருவாட்டி மரியா, மேலும் பல மக்கள் இந்த விழாவை அணுகுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளார்.
முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக நேற்று இந்திய கலைஞர் ராஜா ரவி வர்மாவின் ராமாயண ஓவியங்களை மையமாக்கி அப்சரஸ் ஆர்ட்ஸ் கலைக் குழு இணையம்வழி ‘சீதா’ நடனப் படைப்பை வெற்றி கரமாக மேடையேற்றியது.
களரிபயட், சிலம்பம் ஆகிய தற்காப்புக் கலைகள், பரதநாட்டியம், கதக் ஆகிய நடன வகைகள், பாரம்பரிய யோகா, வீணை இசை ஆகியவற்றை உள்ளடக்கிய இளை யர் படைப்பு ஒன்று இன்று
(6 செப்டம்பர்) இடம்பெறும்.
முழு விவரங்களுக்கு https://www.indianheritage.org.sg/ta மற்றும் https://www.facebook.com/indianheritagecentre ஆகிய தளங் களை நாடலாம்.