கொவிட்-19 நோய்ப் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு, டிபிஎஸ் வங்கி அவர்களுக்கென நிதி, சுகாதாரப் பராமரிப்புத் தீர்வுகள் அடங்கிய புதிய ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன் மூலம் அவர்கள் தங்கள் சேமிப்புகளையும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளையும் சிறப்பாக நிர்வகிக்கலாம் என்று அவ்வங்கி கூறியது.
டிபிஎஸ் வங்கியின் சேமித்து பணம் ஈட்டும் திட்டங்கள், டிபிஎஸ் நிதி பெருக்கும் திட்டம் போன்ற திட்டங்களால் சுயதொழில் புரிவோர் தங்கள் சேமிப்புகளுக்குக் கூடுதல் வட்டி விகிதத்தைப் பெற முடியும் என்று வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் விவரித்தது.
“எங்கள் வாடிக்கையாளர்களில் மூன்றில் ஒரு பிரிவினர் தற்காலிக ஊழியர்கள். அவர்கள் மூன்று மாத அளவிலான பணத்தை அவசரகால சேமிப்புகளாக வைத்திருக்கிறார்கள்.
“இருப்பினும், அவர்களில் 10 விழுக்காட்டினர்தான் டிபிஎஸ் அல்லது இதர நிதிக் கழகங்களிடம் இருந்து காப்புறுதித் திட்டங்களை வாங்கியுள்ளனர்,” என்று டிபிஎஸ் குறிப்பிட்டது.
அண்மையில் டிபிஎஸ் தனது குறைந்தபட்ச பரிவர்த்தனை வரம்பைக் குறைத்தது. மேலும் ‘டிபி எஸ் பேலா’ திட்டத்தையும் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்த அனுமதித்தது.
அதன்படி தற்காலிக பணியாளர்கள், பணத்தைப் பன்மடங்கு பெருக்கும் ‘மல்டிபிளையர்’ கணக்குகளில் போட்டு, தங்கள் சேமிப்புகளைப் பெருக்கிக்கொள்ளலாம்.
அதாவது, வாடிக்கையாளர்கள் தங்களின் முதலாவது $10,000 தொகைக்கு 0.5% வட்டி பெறுவார்கள். அதற்கு அவர்கள் தங்கள் வருமானத்திலிருந்தோ, சம்பளக் கணக்கிலிருந்தோ, ‘டிபிஎஸ் பேலா’ கணக்கிலிருந்தோ மாதத்துக்கு $500க்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டிருக்க வேண்டும்.
தற்காலிகப் பணியாளர்களுக்கு பல வேலைகளிலிருந்து வருமானம் வரக்கூடும் என்பதால் டிபிஎஸ் வங்கி, வருமானம் வரும் வழிகளை விரிவுபடுத்தியிருக்கிறது.
இந்த மாற்றங்களால் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணப் பட்டியல்கள், உணவுச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் போன்றவற்றுக்கு ‘டிபிஎஸ் பேலா’ மூலம் பணம் செலுத்தும் அதேவேளையில் அவர்களுக்குக் கூடுதல் வட்டியும் கிடைக்கும்.
இதற்கு முன்னதாக, வாடிக்கையாளர்கள் கடன்பற்று அட்டைக் கட்டணங்கள், காப்புறுதித் திட்ட சந்தாக்கள், முதலீடுகள், கடன் அடைப்பு போன்றவற்றுக்கு மாதம் குறைந்தது $2,000 பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்.
பாரம்பரியமான வேலைவாய்ப்பு பலன்கள் அல்லது காப்புறுதித் திட்டம் ஆகியவை இல்லாத தற்காலிக பணியாளர்களுக்குச் சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதி திட்டங்களையும் டிபிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
“கொரோனா பரவல் தற்காலிகப் பணியாளர்கள் பலரது வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. அவர்களுக்கு உதவும் வகையிலேயே நாங்கள் பலவித நிதி தொடர்பான தீர்வுகளை அவர்களின் பாதுகாப்புக்காக வெளியிட்டிருக்கிறோம்,” என்றார் டிபிஎஸ் பயனீட்டாளர் வங்கிக் குழுமத்தின் தலைவர் திரு ஜெரமி சூ.