மேம்படுத்தப்பட்ட மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதித் திட்டத்தின் மூலம் சிங்கப்பூரர்கள் மேலும் பலனடையவுள்ளனர். செய்யப்பட்டுள்ள பெரும் மாற்றங்கள், தற்போது காப்புறுதித் திட்டத்தில் உள்ள சில இடைவெளிகளைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
இதன்படி ஓர் ஆண்டுக்கான கோரிக்கைத் தொகைக்கு உள்ள வரம்பு 100,000 வெள்ளியிலிருந்து 150,000 வெள்ளியாக உயர்த்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க உதவுவதுடன் ஒரே ஆண்டில் பலமுறை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் சிங்கப்பூரர்களுக்கும் இது கைகொடுக்கும்.
சமூக மருத்துவமனையில் கடுமையான மருத்துவப் பராமரிப்புக்குத் தேவையான அன்றாட காப்பீட்டுத் தொகை வரம்பும் அதே போல் ஒரு நாளுக்கு 430 வெள்ளியாக உயர்த்தப்படும்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவோர், தங்கும் அறைக்காக செலுத்தும் கட்டணத்தை $800 வரை உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்களுக்குக் கூடுதலாக 200 வெள்ளிக்குக் கோரிக்கை விடுக்கலாம் என்றும் கூறப்பட்டது.
ஒரே நாளில் முடிந்துவிடும் அறுவை சிகிச்சைக்குச் செல்லும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், தங்களின் மெடிஷீல்ட் லைஃப் வழங்குதொகை தொடங்குவதற்கு முன்னதாக ஒவ்வொரு காப்புறுதி ஆண்டிலும் கட்டும் தொகை 3,000 வெள்ளியிலிருந்து 2,000 வெள்ளியாகக் குறைக்கப்படும்.
உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சி, தனக்குத் தானே காயம் விளைவித்தல், போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கம் தொடர்பான சிகிச்சைகள் ஆகியவற்றுக்கும் மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதியைப் பயன்படுத்த முடியும்.