ஆளில்லா வானூர்தியை (ட்ரோன்) இயக்கும் புதிய நடைமுறைகள் அடுத்த ஆண்டில் அறிமுகம் காண்கின்றன. ஒன்றரை கிலோ கிராமுக்கு மேல் எடைகொண்ட அத்தகைய வானூர்தியைப் பறக்கவிடுவதற்கான உரிமம் பெற பயிற்சி எடுக்க வேண்டும் என்பதும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அப்புதிய நடைமுறைகள். 2021 பிப்ரவரி மாதத்தில் நடப்புக்கு வந்த பின்னர் நடைமுறைகளைப் பின்பற்றாதோர் கடுமையான தண்டனைக்கு ஆளாவர்.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று இதனை அறிவித்தது. வானூர்தி உரிமம் பெற இரு வெவ்வேறு சான்றிதழ்கள் அறிமுகம் காணும். ஆளில்லா விமான அடிப்படைப் பயிற்சி சான்றிதழ், ஆளில்லா வானூர்திக்கான விமானி உரிமம் ஆகியன அவை.
வானூர்தியைப் பாதுகாப்புடன் பறக்கவிடும் நோக்கத்திலேயே பயிற்சியும் தேர்வும் கொண்டு வரப்படுகின்றன. பொழுதுபோக்கு அல்லது கல்வி நோக்கங்களுக்காக 1.5 கிலோ முதல் 7 கிலோ வரை எடையுள்ள ‘ட்ரோன்’களைப் பறக்கவிட ஆளில்லா விமான அடிப்படைப் பயிற்சி சான்றிதழ் அவசியம்.
உரிமத்திற்கு விண்ணப்பம் செய்வோர் இணையத்தில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கக்கூடிய வகுப்பில் பங்கேற்ற பின்னர் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.
ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளில்லா விமானப் பயிற்சி அமைப்பு இவற்ைற நடத்தும். பொழுதுபோக்கு அல்லது கல்விக்காக அல்லாமல் வேறு நோக்கங்களுக்காக 7 கிலோ கிராமுக்கு மேல் எடையுள்ள ட்ரோனைப் பறக்கவிட விரும்புவோர் கடுமையான விதிகளைக் கொண்ட ஆளில்லா விமானத்திற்கான விமானி உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து கல்விக் கழகத்தில் பாடங்களைப் பெற்று சுயமாகப் படிக்க வேண்டும். நேரடி மதிப்பீட்டுத் தேர்விலும் அவர்கள் தேற வேண்டும். ஆணையத்தின் தேர்வு அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட விமானப் பயிற்சி அதிகாரி இதனை நடத்துவார்.
இவர்கள் விமானி உரிமத்தைப் பெற்ற பின்னரும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திறன் சோதனைக்குச் செல்ல வேண்டும்.
16 வயது உடையோரும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரும் மட்டுமே இவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும். 16 வயதுக்குக் குறைந்தோர் ஏற்கெனவே உரிமம் பெற்றவரின் கண்காணிப்பின்கீழ் வானூர்தியைப் பறக்கவிடலாம்.
புதிய நடைமுறைகள் அறிமுகமான பின் உரிமமின்றி ட்ரோன்களைப் பறக்கவிடுவோருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $50,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம். மறுமுறை இதே குற்றத்தை செய்வோர் ஐந்தாண்டு வரையிலான சிறை, $10,000 வரையிலான அபராதம் ஆகியவற்றை எதிர்நோக்குவர்.