சிங்கப்பூரில் தகுதி போன்ற காரணங்களின் அடிப்படையில் ஆட்குறைப்பு செய்யவேண்டும், ஆனால், சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளைத் தங்களது ஊழியரணியில் வைத்துக்கொள்வதற்குச் சாதகமாக நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.
என்டியுசியின் நியாயமான ஆட்குறைப்பு பணிச்சட்டத்தின் முக்கிய கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு, கூடுதல் மனிதவளத்தை நிர்வகிப்பது, பொறுப்புடன் ஆட்குறைப்பு செய்வது தொடர்பான முத்தரப்பு ஆலோசனைக் குறிப்பு இவ்வாண்டில் இரண்டாவது முறையாகத் திருத்தப்பட்டுள்ளது.
இன்று வெளியான திருத்தங்கள் மனிதவள அமைச்சு, என்டியுசி, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை இணைந்து உருவாக்கியவை.
தேசிய சம்பள மன்றத்தின் அண்மைய வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில் அனைத்து விதமான செலவு குறைப்பு நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்திய பிறகு, கடைசி நடவடிக்கையாக ஆட்குறைப்பு இருக்க வேண்டும் என்று புதிய திருத்தம் தொடர்ந்து குறிப்பிட்டது.
ஆட்குறைப்பு நடவடிக்கை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும்போது, தகுதி போன்ற காரணங்களின் அடிப்படையில் அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வர்த்தகம் நீடித்திருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் திறனுடையவர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், ‘வலுவான உள்ளூர் ஊழியரணி’யை வைத்திருப்பது உள்ளிட்ட நீண்டகால மனிதவளத் தேவைகளை நிறுவனங்கள் கருத்தில் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆட்குறைப்பு செய்தாலும் விகிதாச்சாரப்படி, உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக நிலவரம் மேம்படும்போது அதிக எண்ணிக்கையில் உள்ளூர்வாசிகளை பணிக்கமர்த்த நிறுவனங்கள் மெனக்கெட வேண்டும் என ஆலோசனைக் குறிப்பு தெரிவிக்கிறது.
சிங்கப்பூரின் பொருளியலை மேம்படுத்த, உள்ளூர்வாசிகளுக்கு நல்ல வேலைகளை உருவாக்க உதவும் வெளிநாட்டுப் பணியாளர்களை வரவேற்க சிங்கப்பூர் தொடர்ந்து தனது கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் எனவும் அது குறிப்பிட்டது.