அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளின் தேவை அதிகமாக உள்ளதென சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார். அக்டோபர் மாதத்தில் கருவிகளுக்கான தேவையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது அரசாங்க எதிர்பார்ப்பை மிஞ்சியதாக தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சராகவும் உள்ள அவர் தெரிவித்தார்.
அதிகமான சிங்கப்பூரர்கள் ‘டிரேஸ்டுகெதர்’ திட்டத்தில் இணைய வேண்டும் என்றும் இதற்கான வலியுறுத்து தேவைப்படும் என்றும் அரசாங்கம் எதிர்பார்த்ததாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
“கருவிகளுக்கான தேவை போதுமா என்ற அக்கறைதான் அப்போது எங்களுக்கு இருந்தது. கருவிகளைத் தயாரிப்பதில் கவனமாக இருக்க விரும்பினோம். அதே சமயம், கருவிகளைத் தயாரிக்கும் பணிகளைத் துரிதமாக்க, செயல்முறையை முன்னதாகவே தொடங்கிவிட்டோம்,” என்றார் அவர். ஜூரோங் குழுத்தொகுதியைச் சேர்ந்த டாக்டர் டான் வு மெங், கேட்ட கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் ஜனில் இதனைக் குறிப்பிட்டார்.
கருவிகளை விநியோகம் செய்யும் பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கிவிட்டது.
சிங்கப்பூர்வாசிகள் 38 சமூக மன்றங்களிலிருந்து கருவியைப் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது. இருப்பினும் உணவகங்கள், பேரங்காடிகள் போன்ற இடங்களுக்குள் செல்ல, ‘டிரேஸ்டுகெதர்’ கட்டாயமாக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து கருவிகளுக்கான தேவை அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
ஒரு சில சமூக மன்றங்களில் நீண்ட வரிசைகள் உருவானதை அடுத்து ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளின் விநியோகத்தை ‘அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமம்’ நிறுத்தி வைத்தது. பின்னர், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் கருவிகள் மீண்டும் அக்டோபர் 29 முதல் விநியோகம் செய்யப்பட்டன.
சிங்கப்பூரர்களில் சிலர், தங்களின் குடியிருப்பு வட்டாரம் அல்லாத வேறு இடத்திற்குப் பயணம் செய்து கருவிகளைப் பெற்றுக்கொள்வர் என்ற நிலையையும் அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றார் டாக்டர் ஜனில்.
அதனால், சொந்த வட்டாரவாசிகளுக்குத் தருவதற்குரிய கருவிகள் மட்டுமே அந்தந்த சமூக மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மார்சிலிங், உட்குரோவ், இயூ டீ சமூக மன்றங்களில் கருவிகளின் விநியோகப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் டிசம்பர் வரை மற்ற சமூக மன்றங்களிலும் விநியோகம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து சமூக மன்றங்களிலும் ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளின் விநியோகப் பணிகள் முடிவடையும் வரை, ‘டிரேஸ்டுகெதர்’ மூலம் ‘சேஃப்எண்ட்ரி’ பதிவு முறையைக் கட்டாயமாக்குவது நடப்புக்கு வராது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தற்போதைக்கு, அடையாள அட்டையின் பட்டைக் குறியீடு போன்ற முந்தைய ‘சேஃப்எண்ட்ரி’ பதிவு முறையைப் பயன்படுத்தலாம்.
சேதமடைந்த கருவிகள் அல்லது மின்கலம் தீர்ந்துபோன நிலையில் உள்ள கருவிகளை மாற்றுவது குறித்தும் கேள்வி எழுந்தது.
கருவிகளின் விநியோகம் முடிவடைந்த பிறகு, அரசாங்கம் இதன் தொடர்பில் தகவல் அளிக்கும் என்றார் டாக்டர் ஜனில்.
‘டிரேஸ்டுகெதர்’ செயலியால் திறன்பேசியின் மின்கலன் தீர்ந்துபோவது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.