எப்போதும் தமிழில் குறைந்தபட்சத் தேர்ச்சியே பெறும் நிஹால் இமான் ஸ்மிதிற்கு கடந்த புதன்கிழமை இன்ப அதிர்ச்சி. தொடக்கநிலை இறுதித் தேர்வில், 235 புள்ளிகளுடன் தமிழ் உட்பட எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ தகுதியுடன் தேர்ச்சி.
தாஜோங் தொடக்கப்பள்ளியில் பயிலும் 12 வயது மாணவர் இமானுக்கு, மூன்றாண்டுகளுக்கு முன்னர் தாயார் மறுமணம் செய்துகொண்டது பெரிதும் பாதித்திருந்தது. படிப்பில் கவனம் சிதறியதோடு ஆர்வமும் குறைந்தது.
ஆனால் பள்ளி ஆசிரியர்கள் அவரின் மனநிலை அறிந்து தக்க நேரத்தில் ஆதரவு வழங்கினர். பெற்றோரும் உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்தனர்.
இமான் தனது உணர்ச்சிகளை ஒருநிலைப்படுத்தி, படிப்பில் சிறந்து விளங்க உழைக்க தொடங்கினார்.
தமிழ் பேசவும் எழுதவும் சிரமப்பட்ட இமான், விடாமுயற்சியுடன் உழைத்தார். பாடத்தில் ஐயம் எழும்போதெல்லாம், தமிழ் ஆசிரியருக்கு குறுந்தகவல் அனுப்புவார். மேலும், இணையம் வழி ஆசிரியர்களைச் சந்தித்து குழப்பங்களைத் தீர்த்துக்கொள்வார்.
“இமானின் பாட்டிதான் எப்போதும் இமானுக்குத் தமிழ் கற்றுத் தருவார். துணைப்பாட வகுப்புகளுக்கும் சென்றார். ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்றினால் பாட்டியையும் சந்திக்க முடியவில்லை, துணைப்பாடங்களுக்கும் செல்ல முடியவில்லை. ஐந்து மாதங்களாக இமான் சுயமாகவே பாடங்களைப் படித்து பயிற்சிசெய்தார். வீட்டில் 2 வயது குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் என்னால் இமானின் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. இமானை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது,” என்று பூரிப்புடன் கூறினார் இமானின் தாயார்.
ரோபோடிக்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட இமான், 2019- ஆம் ஆண்டு நடந்த தேசிய ரோபோட்டிக்ஸ் போட்டியில் தாஜோங் தொடக்கப் பள்ளியைப் பிரதிநிதித்து கலந்துகொண்டார். மேலும் கொவிட்-19 காலத்தின்போது தூர இடைவெளி, பாதுகாப்பான பழக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நண்பர்களுடன் இணைந்து ஒரு காணொளியையும் வடிவமைத்திருந்தார்.
“ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் தந்தனர். பெற்றோரும் தொடர்ந்து ஆதரவு தந்தனர். பாட்டி எனக்கு நிறைய உதவிகள் செய்தார். இவர்கள் அளித்த ஆதரவு படிப்பில் நான் சிறந்து விளங்க வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தியது.” என்று கூறினார் இமான்.