கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில், சாதாரண நிலையில் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற சிவ்ராஜ் சேகர், கணிதப் பாடத்தில் தோல்வியைத் தழுவினார். அதனால் மீண்டும் ஹுவாமின் தொடக்கப்பள்ளியில் ஆறாம் ஆண்டு படிப்பை மேற்கொள்ளவும் அனைத்து பாடங்களையும் அடிப்படை நிலையில் எடுக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.
“சிவ்ராஜ் மனம் தளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக கவலையை மறைத்து குடும்பத்தி னர் அனைவரும் அவருக்கு தைரியம் ஊட்டினோம். தேர்வுகள் வாழ்வின் முடிவல்ல,” என்று எடுத்துச் சொன்னோம்,” என்றார் சிவ்ராஜின் தாயார் திருமதி சரஸ்வதி கோபால், 54.
குடும்பத்தினரின் ஊக்குவிப்பினால் இவ்வாண்டு சிறந்த தேர்ச்சி பெற்ற 13 வயது சிவ்ராஜ், வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவில் உயர்நிலைப் படிப்பைத் தொடர தகுதிபெற்றுள்ளார்.
“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு என் நண்பர்கள் பலரும் உயர்நிலைப் பள்ளிக்குத் தேர்வு பெற்றபோது எனக்குப் பொறாமையாக இருந்தது. என் வெற்றிக்கு என் குடும்பமும் ஆசிரியர்களுமே முக்கிய காரணம்,” என்றார் சிவ்ராஜ்.
தமிழ் ஆசிரியர் திருவாட்டி கஜன், சிவ்ராஜுக்கு நம்பிக்கையூட்டியதாகவும் வாரயிறுதி நாட்களில்கூட ‘ஸூம்’ மெய்நிகர் காணொளி வழி கூடுதல் வகுப்புகளை நடத்தி வழிகாட்டியதாகவும் குறிப்பிட்டார் சரஸ்வதி. “சிவ்ராஜின் வெற்றிக்கு அவரின் ஆசிரியர்கள் முக்கிய காரணம். நம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி போன்ற நற்பண்புகளைக் கற்பித்து அவனை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்,” என்றார் அவர்.
சிவ்ராஜின் தந்தை 61 வயது திரு சேகர் நடேசன், அண்ணன் 25 வயது திரு ஹரிஹரன் சேகர் ஆகியோரும் சிவ்ராஜின் படிப்பிற்குப் பக்கபலமாக அமைந்தனர். அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ள சிவ்ராஜ் விமானவியல், ரசாயனம், உயிரியல் துறைகளில் மேற்கல்வியைத் தொடர விரும்புகிறார்.