இன்றைய தினம் தமிழ் முரசு நாளிதழை ‘தென்காசி சாரல்’ உணவகத்தில் வாங்குவோருக்கு இலவசமாக கோழி பிரியாணி வழங்கப்படுகிறது. முதலில் வரும் 250 பேருக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்.
எண் 20 அப்பர் வெல்டு சாலை, சிங்கப்பூர் 207377 எனும் முகவரியில் அமைந்துள்ள தென்காசி சாரல் உணவகத்தில் இன்று தமிழ் முரசு நாளிதழ் விற்கப்படுகிறது. இந்தச் சிறப்புச் சலுகைக்குத் தகுதிபெற தமிழ் முரசு நாளிதழை அந்த உணவகத்தில் மட்டுமே வாங்க வேண்டும். காலை 9 மணிக்கு விற்பனை தொடங்குகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டாக தென்காசி சாரல் உணவகத்தை லிட்டில் இந்தியாவில் நடத்திவரும் திரு ஷேக் முகம்மதும் திரு பாபா ஹுசைனும், தமிழ் மொழிக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் இந்தச் சலுகையை வழங்குவதில் பெருமிதம் கொள்வதாகக் கூறினர்.
“தமிழ் முனிவர் அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலையின் அடிவாரத்தில் உள்ள தென்காசி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட எனக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் மதுரையைச் சேர்ந்த பாபா ஹுசைனுக்கும் தமிழ் மீதான ஆர்வம் அதிகம் உண்டு. அதனால் சிங்கப்பூரில் தமிழ் நாளிதழான தமிழ் முரசை மக்களுக்கு வழங்குவதிலும் அதைக் கொண்டு உணவுப் பொட்டலத்தை வழங்குவதிலும் பெருமை கொள்கிறோம்,” என்றார் திரு ஷேக்.
விரைவில் அந்தக் கடையில் அனைத்து கோழி சார்ந்த சாப்பாடும் நாட்டுக் கோழியைக் கொண்டே வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், ஆரோக்கியமாகவும் சுவையாகவும் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உணவுத் தொழிலில் இறங்கியதாகக் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டுக் கோழி சூப், நாட்டுக் கோழி பிரியாணி என பல வகையான உணவுகளை நாட்டுக் கோழியைக் கொண்டே தயார் செய்கிறார்கள்.
தினமும் காலை 6 மணிக்குத் திறக்கும் இந்த உணவகம், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு ஊழியர்களுக்காக மலிவு விலையில் உணவு விற்று வருகிறது. காலை வேளை சிற்றுண்டி இந்தக் கடையில் $1க்கு விற்கப்படுகிறது.
‘லேம்ப் ஷேங்க்’ பிரியாணி, நெய் சோறு, தேங்காய் சோறு என பலதரப்பட்ட உணவு வகைகளைச் சமைத்து வழங்கும் இந்த உணவகம், உயர்தர பாஸ்மதி அரிசியையே சமையலுக்குப் பயன்படுத்துகிறது.
மேலும், உணவு தாளிப்புக்கு செக்கு எண்ணெய்யே பயன்படுத்தப்படுகிறது.
கருவாட்டுக் குழம்பு, இறைச்சி நெஞ்செலும்பு குருமா, முஹல் கோழிக் குழம்பு, செட்டிநாடு வகை, சட்டி சோறு போன்றவை இந்த உணவகத்தில் விற்கப்படுகின்றன. கோதுமை பரோட்டா இந்தக் கடையின் சிறப்பு. இங்கு உணவு வாழை இலையில் பரிமாறப்படுகிறது.