இவ்வாண்டு எச்ஐவி கிருமியால் பாதிக்கப்படும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 300க்கும் குறைவாக இருக்கும் என முன்னுரைக்கப்படுகிறது. 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த எண்ணிக்கை 300க்கும் குறைவாக இருக்கும் என முன்னுரைக்கப்படுவது இதுவே முதன்முறை.
நேற்று முன்தினம் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு இந்தத் தகவல்களை வெளியிட்டது.
இவ்வாண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 220 பேருக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை 300க்கும் குறைவாக இருந்தது 2003ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு 242 பேருக்கு எச்ஐவி உறுதியானது. 2007க்கும் 2017ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் 400 முதல் 500 பேருக்கு எச்ஐவி உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வாண்டு எச்ஐவி சம்பவங்கள் குறைந்திருப்பதற்கு கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மவுண்ட் எலிசபெத் நொவீனா நிபுணத்துவ நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் கோலின் தாமஸ், “கொவிட்-19 அச்சம் காரணமாக மக்கள் தங்களது சமூக பழக்கவழக்கங்களைக் குறைத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தனர். ஒன்றுகூடல்களும் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சிகளும் குறைந்தன,” என்று கூறினார்.
எனினும், எச்ஐவி தொற்றியோரில் சிலர், கொவிட்-19 சூழல் காரணமாக பரிசோதனைக்குச் செல்வதைத் தவிர்த்து இருக்கலாம் என்பதால் அவர்களது எண்ணிக்கையும் இந்தத் தகவலில் சேர்க்கப்படாமல் இருக்கலாம் என்று மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் லியோங் ஹோ நாம் சொன்னார்.
இவ்வாண்டின் முதற்பாதியில் அறிவிக்கப்பட்ட 125 எச்ஐவி சம்பவங்களில் 90 விழுக்காட்டினர் ஆண்கள். அவர்களில் 40 விழுக்காட்டினர் 40க்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எச்ஐவி கிருமி தொற்ற பாலியல் உறவே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட 125 பேரில் 96 விழுக்காட்டினருக்கு எச்ஐவி தொற்ற பாலியல் உறவுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியில் முனைவர் பட்டம் பயிலும் திரு ரேய்னர் டான், 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு எச்ஐவி சம்பவங்கள் குறைந்துள்ளதைச் சுட்டினார்.
2016ஆம் ஆண்டு பிற்பகுதியில் எச்ஐவி தொற்றைத் தடுக்கும் புதிய மருந்து ஒன்று அறிமுகமானதே அதற்குக் காரணம் என்று அவர் விவரித்தார்.
இவ்வாண்டு அறிவிக்கப்பட்ட எச்ஐவி சம்பவங்களில் பாதிக்கும் அதிகமானவை, மருத்துவப் பராமரிப்பின்போது நடத்தப்பட்ட எச்ஐவி பரிசோதனையில் கண்டறியப்பட்டன. அதுபோக, தாங்களாகவே முன்வந்து செய்துகொண்ட எச்ஐவி பரிசோதனையில் 15 விழுக்காட்டினருக்கும் எச்ஐவி உறுதியானது.
எச்ஐவி தொற்றும் அபாயத்தை எதிர்நோக்குவோர் அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் வலியுறுத்தியுள்ளன.
“எச்ஐவி தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு ஆக்ககரமான சிகிச்சை அளித்தால், எய்ட்ஸ் ஏற்பட்டு, அது தீவிரமடைவதைத் தள்ளிப்போட முடியும்,” என்று அமைச்சு கூறியது.