ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (எஸ்டி) பிரஸ் வெளியிட்ட மூன்று புத்தகங்கள் பாப்புலர் வாசகர் விருப்ப விருதுகளைப் பெற்று இருக்கின்றன.
பெரியவர்களுக்கான ஆங்கில புத்தகப் பிரிவில் ‘ஃபிப்டி சீக்ரட்ஸ் ஆஃப் சிங்கப்பூர்ஸ் சக்சஸ்’ என்ற புத்தகம் முதல் பரிசை வென்றுள்ளது. இதை சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சில் பொது தூதராக இருக்கும் பேராசிரியர் டோமி கோ தொகுத்து உருவாக்கினார்.
இந்தப் பிரிவில் எஸ்டி பிரஸ் வெளியிட்ட புத்தகங்களே இரண்டாவது, மூன்றாவது பரிசுகளையும் பெற்றன.
எஸ்டி முதலீட்டுத் துறையின் முன்னாள் ஆசிரியரும் டிபிஎஸ் வங்கியில் நிதித் திட்ட ஆலோசனைத் துறையின் தலைவருமான திருவாட்டி லோர்னா டான் எழுதிய ‘மனி ஸ்மார்ட்: ஓன் யுவர் ஃபைனான்சியல் டெஸ்டனி’ என்ற புத்தகம் இரண்டாவது பரிசைப் பெற்றது.
முன்னாள் அமைச்சர் எஸ். ஜயகுமார் எழுதிய ‘டிப்ளமசி: ஏ சிங்கப்பூர் எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு மூன்றாவது விருதைப் பெற்றது.
இது பற்றி கருத்துரைத்த பேராசிரியர் ஜயகுமார், முதல் இரண்டு விருதுகளை வென்ற பேராசிரியர் கோ மற்றும் திருவாட்டி டானுக்கு நன்றி கூறினார்.
அவர்களுடன் சேர்ந்து தம் புத்தகத்திற்கும் விருது கிடைத்து இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பேராசிரியர் ஜயகுமார் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் இந்த விருது போட்டியை நடத்தி வரும் பாப்புலர் புத்தகக்கடை நிறுவனத்துக்கு பேராசிரியர் கோ நன்றி கூறினார். கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டு விழா இணையம் வழி நடந்தது குறிப்பிடத்தக்கது.