சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் சிறுநீரகம் தொடர்பான நோய்களைக் குறைக்கவும் புதிய திட்டங்களை முன்னெடுப்பதில் மக்களை ஊக்குவிக்க தேசிய சிறுநீரக அறநிறுவனம் புதிய இயக்கம் ஒன்றை நேற்று தொடங்கியது. சிங்கப்பூரில் சிறுநீரக செயல் இழப்புச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ‘கிட்னி வீ கேர் மூவ்மண்ட்’ என்று அழைக்கப்படும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.ரத்த சுத்திகரிப்பு அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் கிட்டத்தட்ட ஆறு புதிய நோயாளிகள் ஒவ்வொரு நாளும் தேசிய சிறுநீரக அறநிறுவனத்திற்கு வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 855 புதிய நோயாளிகள் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்காக தேசிய சிறுநீரக அறநிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த நிதியாண்டில் சிறுநீரக செயலிழப்புக்குச் சிகிச்சை அளிக்க $116 மில்லியனை அறநிறுவனம் செலவிட்டது. சிங்கப்பூரில் தற்போது 8,000க்கும் அதிகமான நோயாளிகள் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். மூன்றில் இருவர் தேசிய சிறுநீரக அறநிறுவனத்தில் பராமரிக்கப்படுகின்றனர். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்கள் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. நீரிழிவுடன் தொடர்புடைய சிறுநீரக செயலிழப்புச் சம்பவங்கள் அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்.
கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நீரிழிவு உடையோர் எண்ணிக்கை 2050க்குள் ஒரு மில்லியனை எட்டும் என முன்னுரைக்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ‘கிட்னி வீ கேர் மூவ்மண்ட்’ இயக்கத்திற்கு $1 மில்லியன் நிதி வழங்க தேசிய சிறுநீரக அறநிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளது.
ஒவ்வொரு திட்டத்திற்கும் $5,500 வரையிலான நிதி அல்லது திட்டத்திற்கான செலவில் 80 விழுக்காடு வரையிலான நிதியை விண்ணப்பதாரர்கள் பெறுவர். இந்த நிதிக்கு சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தகுதி பெறுவர்.
இதை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க சுகாதாரப் பராமரிப்பு, தொடர்பு, நிதித் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.யூஹுவாவில் தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் ரத்த சுத்திகரிப்பு நிலையம் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. அதையொட்டி நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
தனிநபர்கள், சமூகப் பங்காளிகள், தனியார்துறை போன்ற பலதரப்பினரிடம் இருந்து புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான நிதி திரட்டப்பட்டுள்ளதாக திருவாட்டி ஃபூ சொன்னார்.