தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள் போன்ற போட்டிகளில் சிங்கப்பூரை பிரதிநிதித்து வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கின்ற வீரர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார்.
அந்த வீரர்கள் நாடு திரும்பும்போது அவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கும்.
அந்தக் காலகட்டத்திலும் அவர்கள் இங்கு தொடர்ந்து பயிற்சி பெறவும் தங்களுடைய உடலுறுதியை நிலைநாட்டி வரவும் உதவும் தடுத்துவைப்புச் செயல்திட்டம் ஒன்றையும் அதிகாரிகள் வடிவமைத்து உருவாக்குவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறுவோர் ஒருபுறம் இருக்க, விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுகளில் கலந்துகொள்ள வெளிநாடு செல்லும் வீரர்களுக்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று செவ்வாய்க்கிழமை அளித்த ஒரு பேட்டியில் திரு டோங் தெரிவித்தார்.
“வெளிநாடு செல்லும் வீரர்கள், கொவிட்-19 கிருமியுடன் நாடு திரும்பும் ஆபத்தை நாம் விரும்பவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அது ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்கள் ஆயத்தமாவதைக் கெடுத்துவிடும்,” என்று அமைச்சர் திரு டோங் குறிப்பிட்டார்.
தகுதிபெறும் விளையாட்டு வீரர்கள் எப்போது முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தொடங்குவார்கள் என்று கேட்டபோது, இதன் விவரங்கள் இன்னமும் வகுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலையில் தொடங்குகின்றன. ஆனால் அந்தப் போட்டிகள் மேலும் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வியும் தலைதூக்கி உள்ளது. ஜப்பானில் கொவிட்-19 தொற்று அதிகமாக இருப்பதே காரணம்.
வரும் 2034ல் உலகக் காற்பந்து போட்டிக்கு ஆண்கள் குழு தகுதி பெற வேண்டும் என்ற இலக்கை சிங்கப்பூர் வகுத்து இருக்கிறது.
இந்த இலக்கு சிங்கப்பூரில் நீண்டகாலப் போக்கில் விளையாட்டுத் துறை மேம்பட பலன் அளிக்கும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலகக் காற்பந்து போட்டிக்கு நாம் தகுதி பெற்றுவிட்டால் அது நல்லது என்றும் இல்லை என்றாலும் நம்முடைய விளையாட்டுத் தரங்கள் மேம்பட்டு இருக்கும் என்றும் அத்தகைய ஒரு மேம்பட்ட நிலையைக் காண்பது தனது விருப்பம் என்றும் அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூர் காற்பந்து சங்கம், ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவற்றுடன் தமது அமைச்சு அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் 2034 இலக்குக்கான வழிகாட்டித் திட்டங்களைக் குறித்த நேரத்தில் அமைச்சு அறிவிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.