மூத்தோர் தலைமுறை அலுவலக (Silver Generation Office) தொண்டூழியர்கள் முதியவர்களை வீட்டில் அல்லது சமூக இடங்களில் சந்தித்து அரசாங்க திட்டங்கள் பற்றி விளக்கம் தருவது வழக்கம்.
முதியவர்களிடம் என்ன தகவல்களைப் பகிர்ந்துகொள்வது என்று திட்டமிடும் அவ்வலுவலகத்தின் கொள்கை தொடர்புகள், ஆய்வின் பிரிவு தலைவராக திருமதி ஞா.பவானி பொறுப்பு வகிக்கிறார்.
கடந்தாண்டு கொவிட்-19 கிருமித்தொற்று தொடங்கிய சமயத்தில், அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடிய முதியவர்களுக்கு எப்படி உதவலாம் என அந்த அலுவலகம் ஆராய்ந்தது.
அதில் 53 வயது முதியவர் ஒருவர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அவதிப்படுவதாகவும் தனிமையில் வாழ்வதாகும் திருமதி பவானிக்கு தெரிய வந்தது. புற்றுநோயின் தாக்கம் அந்த முதியவரின் நடமாட்டத்தைப் பெரிதும் பாதித்தது.
அவருக்கு மளிகைப் பொருட்களை வாங்கித் தருவது, நாளுக்கு இருமுறை அவரது நாயை சிறிது நேரம் நடக்க அழைத்துச் செல்வது போன்றவற்றுக்கு அம்முதியவருக்கு உதவி தேவைப்பட்டது.
ஒருமுறை அம்முதியவர் சக்கர நாற்காலியில் தாமாகவே நாயை அழைத்துச் செல்லும்போது தரையில் விழுந்துவிட்டாராம்.
எல்லா நாட்களிலும் முதியவரின் நாயை இருமுறை கீழே அழைத்துச்செல்வதற்கு தொண்டூழியர்கள் கிடைப்பது கடினமாக இருந்ததால், பொதுச் சேவை அதிகாரியான திருமதி பவானி அவருக்கு உதவ முன்வந்தார்.
கொவிட்-19 நோய்முறியடிப்பு காலம் தொடங்கிய கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் நடப்பில் இருந்ததால் பவானியால் தொண்டூழியம் புரிய முடிந்தது.
நாய்ப் பிரியரான திருமதி பவானி முதல் சந்திப்பிலேயே அம்முதியவரின் நாயுடன் தொடர்புகளை வளர்த்துகொண்டாலும் யாரி டமும் உதவி கேட்கும் பழக்கமில்லாத அம்முதியவர் திருமதி பவானியிடம் அதிகம் பேசாதிருந்தார்.
நாளடைவில் அம்முதியவரே மெல்ல மெல்ல திருமதி பவானி யிடம் தமது வாழ்க்கையைப் பற்றி பேசத் தொடங்கினார். படிப்படியாக திறன்பேசி தொடர்புகள் வழி இவர்களிடையே நட்புறவு மலர்ந்தது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அம்முதியவரின் உடல்நிலை மோச மடைய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தமது நாயை சில நாட்கள் பார்த்துக்கொள்ளுமாறு திருமதி பவானியிடம் அவர் உதவி கேட்டிருந்தார்.
அந்த சில நாட்கள் சில மாதங்களானது. திருமதி பவானியும் அவரது கணவரும் அவ்வப்போது முதியவரைச் சந்திக்க மருத்துவமனை செல்வார்கள்.
அவர்கள் மசாலா தேநீர் போன்ற முதியவர் கேட்கும் விருப்பமான உணவுப் பொருட்களையும் பானங்களையும் வாங்கி அவரை மகிழ்வித்தனர்.
“உரிமையோடு என்னிடம் அவர் விரும்பியதைக் கேட்பது என் மனதை நெகிழ வைத்தது. சில வேளைகளில் திறன்பேசிக் காணொளி தொடர்பு வழி அவரின் நாயையும் அவரிடம் காட்டினோம்,” என்றார் திருமதி பவானி, 38.
தாம் உயிர் வாழ இன்னும் ஒரு வாரமே உள்ளது என்று முதியவரிடம் தெரிவிக்கப்பட்டதும் அம்முதியவர் வளர்த்த நாயை நேரில் சந்திக்க ஏற்பாடுகள் செய்ய உதவினார் திருமதி பவானி.
இறப்பதற்கு மூன்று நாளுக்கு முன், திருமதி பவானியிடம் தம் செல்லப் பிராணியை நிரந்தரமாகப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி இயற்கை எய்தினார் அம்முதியவர்.
முதியவரின் கடைசி ஆசைக்கு இணங்க இன்றுவரையில் திருமதி பவானி அவரது நாயைப் பராமரித்து வருகிறார்.
“தனிமையில் யாராவது துணையின்றி வாழ்வது சிரமம் என்பதை உணர்வேன். எங்களால் ஈன்ற உதவியை செய்ய முடிந்ததில் ஒருவித மனத் திருப்தி,” என்று கூறினார் தொண்டூழியம் மூலம் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடரும் இந்த அரசாங்க ஊழியர்.